பதிவு செய்த நாள்
28 மே2012
00:58
தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்கள், முழுமை பெறாத நிலையிலும், சரக்குகளை சிறப்பான முறையில் கையாண்டு சாதனை படைத்து வருகின்றன. இத்துறைமுகங்கள், சென்ற நிதியாண்டில், 12.96 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளன.தமிழகத்தில், 1,076 கி.மீ. நீளத்திற்கு கடல் வரம்பு உள்ளது. இங்கு, சென்னை, எண்ணூர் தூத்துக்குடி ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவை தவிர, 23 சிறு துறைமுகங்கள் உள்ளன. பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிறிய துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
கடல்சார் வாரியம்:இந்தியாவில், 187 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மிகவும் அதிகபட்சமாக, 53 சிறு துறைமுகங்கள் உள்ளன. இதையடுத்து, குஜராத் 40, ஆந்திரா 12, கேரளா 10, என்ற எண்ணிக்கையில் சிறிய துறைமுகங்கள் உள்ளன.தமிழகத்தில், சிறு துறைமுகங்கள், தோணித் துறைமுகங்கள், நங்கூர மிதவைகள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்குதல், கண்காணித்தல் போன்ற பணிகளை, தமிழ்நாடு கடல்சார் வாரியம் மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள கடலூர், நாகை, பாம்பன், ராமேஸ்வரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய ஏழும், அரசு துறைமுகங்களாகும்.
இதில், கடலூர், நாகை துறைமுகங்களில் மட்டுமே, சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் துறைமுகங்களில் பயணிகள் போக்குவரத்தும், பாம்பனில் மிதவை கலன்கள் மூலம் சரக்கு போக்குவரத்தும் நடைபெறுகிறது. மற்ற துறைமுகங்கள் பயன்பாட்டில் இல்லை.எண்ணூர், திருச்சோபுரம், பி.ஒய்.3, திருக்கடையூர், கூடங்குளம், காட்டுப்பள்ளி, முகையூர், சிலம்பிக்குளம், பரங்கிப்பேட்டை, காவேரி, வானகிரி, திருக்குவளை, உடன்குடி, மணப்பாடு, புன்னக்காயல், செட்டிநாடு தரங்கம்பாடி ஆகிய, 16 தனியார் துறைமுகங்களில், முதல் ஐந்து துறைமுகங்களில் மட்டுமே, தற்போது, குறைந்தளவில் சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. இத்துறைமுகங்களின், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட அனைத்தும் தனியாரைச்
சார்ந்தது.
கப்பல் நிறுத்தும் வசதி:தமிழகத்தில் அமைக்கப்படும், சிறு துறைமுகங்கள் அனைத்தும், அனல் மின் நிலையம், உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளை கையாளும் வகையிலும், கப்பல் பழுதுபார்த்தல், கப்பல் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக அமைக்கப்பட்டு வருகின்றன.இங்குள்ள சிறு துறைமுகங்களில், கப்பல்களை நிறுத்துவதற்கான வசதி இல்லை. அதனால் கப்பல்கள் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின்னர், அங்கிருந்து மிதவைகள் மூலமாக சரக்குகள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. அது போன்றே, ஏற்றுமதியும் நடைபெறுகிறது.
இத்துறைமுகங்களில், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், இயந்திர தளவாடங்கள், நாப்தா, எரிவாயு, நிலக்கரி, உரம் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. சிமென்ட், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சேமிப்பு கிடங்கு:எண்ணூர் மற்றும் திருக்கடையூர் துறைமுகங்களில், கப்பலில் இருந்து, திரவ அமோனியா, நாப்தா ஆகியவை கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் வழியாக, கரையிலுள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு நேரடியாக கொண்டு வரப்படுகிறது.
பி.ஒய். துறைமுகத்திலிருந்து, இயற்கை எரிவாயு, குழாய் மூலம் திருக்கடையூர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.தற்போது, இத்துறைமுகங்கள் அனைத்தும், முழு அளவில் செயல்பட துவங்கவில்லை என்றாலும், இவை கையாளும் சரக்குகளின் அளவு சிறப்பான முறையில் அதிகரித்து வருகிறது.
தொழில் வளர்ச்சி:அனைத்து துறைமுகங்களும், முழுமையாக செயல்படும் போது, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்களில், சரக்குகள் கையாளுவதற்கான நெருக்கடி குறையும். மேலும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கடல்சார் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நிதி நெருக்கடி காரணமாக, சிறு துறைமுகங்கள் அமைப்பதில், அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது.
தற்போது, தனியார் பங்கேற்கும் வகையில், அதிகளவில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.வறண்டு கிடக்கும் கடற்கரையோர மாவட்டங்களில், சிறு துறைமுகங்களை ஏற்படுத்துவதன் மூலம், ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும், துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களையும், அதிகளவில் உருவாக்க முடியும். இதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். அரசின் வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|