பதிவு செய்த நாள்
29 மே2012
00:29
புதுடில்லி:உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, நடப்பு சந்தை பருவத்தில் (ஏப்ரல்-ஜூன்), இதுவரையிலுமாக, நாட்டின் கோதுமை கொள்முதல், 3.26 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 2.48 கோடி டன்னாக இருந்தது என, இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.மதிப்பீடு:உலகளவில், கோதுமை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் கோதுமை உற்பத்தி, 9 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் மூலம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. ஒரு குவிண்டால் கோதுமையை கொள்முதல் செய்வதற்காக, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 1,285 ரூபாயை வழங்கி வருகிறது.நடப்பு பருவத்தில், கோதுமை உற்பத்தியில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், பருவம் தவறிய மழை பொழிவால், இதன் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையிலும், ஒட்டுமொத்த அளவில், கோதுமை கொள்முதல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
நடப்பு பருவத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து முறையே, 1.28 கோடி டன் மற்றும் 86 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், மத்திய பிரதேசத்தில், 69 லட்சம் டன், உத்தரபிரேதசத்தில், 25 லட்சம் டன் என்றளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கிடங்கு வசதி:கொள்முதல் செய்யும் உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கு, மத்திய அரசிடம் போதுமான கிடங்கு வசதியில்லை. நடப்பு பருவத்தில், 6.28 கோடி டன் உணவு தானியங்களை சேமிக்க மட்டுமே கிடங்கு வசதிஉள்ளது.
ஆனால், உணவு தானியங்களின் கொள்முதல் 7.50 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உணவு தானியங்கள் வீணாவதை தடுக்கும் வகையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு, "புதிதாக கொள்முதல் செய்யும் உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கு இடவசதி இல்லாததால், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, 1 கோடி டன் கோதுமையும், பொது சந்தையில், 30 லட்சம் டன் கோதுமையும் வினியோகம் செய்யலாம்' என, பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.மேலும், அரசு கிடங்குகளில் இருந்து, 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் எனவும், இக்குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|