பதிவு செய்த நாள்
29 மே2012
00:30
புதுடில்லி:வரும் 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் காபி உற்பத்தி, 51 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை-60 கிலோ) குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4 சதவீதம் குறைவாகும் என, அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.காபி உற்பத்தி உயர்வதற்குரிய பருவச் சூழல் நன்கு இல்லாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.சர்வதேச அளவில், காபி உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
இந்தியாவில், காபி பயிருக்கு பாரம்பரிய இடங்களாக திகழும் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், 4 லட்சம் ஹெக்டேரில், காபி பயிரிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆந்திரா, ஒடிசா போன்ற புதிய பகுதிகளிலும், இவை பயிரிடப்பட்டுள்ளது.நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், காபி உற்பத்தி, 53 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவ நிலையில் மாற்றம் இல்லாததால், இதன் உற்பத்தி, வரும் சந்தைப் பருவத்தில், 4 சதவீதம் குறைந்து, 51 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 36 லட்சம் மூட்டையிலிருந்து, 34 லட்சம் மூட்டைகளாகவும், அரபிகா வகை காபி உற்பத்தி, 17.20 லட்சம் மூட்டையிலிருந்து, 16.60 லட்சம் மூட்டைகளாகவும் குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு பயன்பாடு, 10 லட்சம் மூட்டைகள் என்றளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|