பதிவு செய்த நாள்
30 மே2012
00:56
புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017), இந்திய தொலை தொடர்பு துறையில், தனியார் நிறுவனங்கள் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளும் என, திட்டக் குழுவின் அடிப்படை கட்டமைப்பு பிரிவு மதிப்பீடு செய்துள்ளது.இது, கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, இரு மடங்கு அதிகமாகும். அடுத்து 2-3 ஆண்டுகளில் நடைபெற உள்ள, 2ஜி மற்றும் 4ஜி அலைவரிசை ஏலம் மூலம், தொலை தொடர்பு துறையில் புதிய முதலீடுகள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தொடர்பு துறையில், கடந்த ஐந்தாண்டுகளில், ஒட்டுமொத்த அளவில், பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடு 5.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, அடுத்த ஐந்தாண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, திட்டக் குழு மதிப்பிட்டுள்ளது.
ஆனால், திட்டக் குழுவிற்குள்ளேயே இந்த மதிப்பீட்டில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. தொலை தொடர்பு துறையில், ஒட்டுமொத்த முதலீடு 6.5 லட்சம் கோடி ரூபாயாகவும், இதில், தனியாரின் பங்களிப்பு 5.2 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கான பணிக்குழு மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, "அலைக்கற்றை உரிமம் மற்றும் சேவைக்கான தொகையை சேர்த்து கணக்கிட்டுள்ளதால், இந்த வேறுபாடு எழுந்துள்ளது' என்றார்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகள் முற்றுப் பெறும் போது, இந்த மதிப்பீடு உண்மையானதாக இருக்கும். இல்லையென்றால், முதலீடுகளில் மாறுதல் ஏதும் இருக்காது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பொது துறையை பொறுத்தவரை, அவற்றின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பொது துறை நிறுவனங்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே தொலை தொடர்பு துறையில் முதலீடு செய்துள்ளன. இது, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பொது துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களிடம், குறிப்பிடத்தக்க விரிவாக்கத் திட்டங்கள் ஏதும் இல்லை என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|