பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
01:13
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்ததையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,349 கோடி டாலராக (67 ஆயிரத்து 450 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்:சென்ற ஏப்ரலில், நாட்டின் இறக்குமதி, 3,794 கோடி டாலராக (1 லட்சத்து 89 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 3.83 சதவீதம் அதிகமாகும்.நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெயின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், இதன் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 7 சதவீதம் அதிகரித்து, 1,390 கோடி டாலராக (69 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எண்ணெய் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதி, 2,403 கோடி டாலராக (1 லட்சத்து 20 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) இருந்தது.சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.23சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,445 கோடி டாலராக (1 லட்சத்து 22 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த ஏற்றுமதி மதிப்பில், பெரும்பகுதி, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவால் ஏற்பட்டதால் கிடைத்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறை உயர்ந்து வருவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ,பி.) வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அரசின் நிதி பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்யும். நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெயின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. இதுவும், வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ரூபாய் வெளிமதிப்பு:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதுவும், இறக்குமதி செலவினம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற வியாழனன்று, ரூபாயின் வெளிமதிப்பு இது வரை இல்லாத அளவிற்கு, வர்த்தகத்தினிடையே 56.52 ஆக மிகவும் சரிவடைந்து போனது. இது, @நற்று 55.54 ஆக இருந்தது.கச்சா எண்ணெய் தவிர, பொறியியல் சாதனங்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதி அதிகரித்து வருவதும் வர்த்தக பற்றாக்குறை உயர்விற்கு வழி வகுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம்:நாட்டின் ஏற்றுமதி வருவாயில்,சேவை துறைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை துறைகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், ரூபாய் வெளிமதிப்பு சரிவால், மற்ற ஏற்றுமதி துறைகள் அதிக பயனடைந்து வரும் வேளையில், இத்துறை நிறுவனங்களுக்கு அதிக பலன் இல்லாமல் உள்ளது என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|