பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
13:49
உலகளவில் கார் நிறுவனங்கள், உற்பத்தி பழுதான வாகனங்களை திரும்ப அழைத்து (வைக்கிள் ரிகால்), குறிப்பிட்ட பழுதை சீர் செய்து தருவது, வழக்கமான ஒன்று. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை, தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாகம்(என்.ஹெச்.டி.எஸ்.ஏ.,) அமைப்பு, சோதனை செய்யும். உற்பத்தியில் பழுதை கண்டுபிடித்தால், குறிப்பிட்ட வாகன தொகுப்பை திரும்ப அழைத்து, பழுதை சீர் செய்து தர வேண்டும் என்று, கார் நிறுவனங்களுக்கு உத்தரவிடும். இதே போன்ற சோதனையை, சுற்றுசூழல் பாதுகாப்பு ஏஜென்ஸியும்( இ.பி.ஏ.,) மேற்கொள்ளும். ஐரோப்பிய நாடுகளிலும், இதுபோன்ற போக்கு காணப்படுகிறது.
ஆனால், இந்தியாவில், இந்த நடைமுறை இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. கார் நிறுவனங்கள் தாங்களாகவே பழுதான கார்களை திரும்ப அழைத்து, பழுதை இலவசமாக சீர் செய்து கொடுக்கின்றன. 2010ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், மாருதி சுசூகி நிறுவனம், ஒரு லட்சம் ஏ- ஸ்டார் கார்களில், இந்த நடைமுறையை பின்பற்றியது. 2011ம் ஆண்டு ஃபிப்ரவரியில், ஹோண்டா சியல் நிறுவனம், 57,853 ஹோண்டா சிட்டி கார்களில், பழுதை நீக்கியது. தொடர்ந்து, ஏப்ரல் மாதம், மாருதி சுசூகி நிறுவனம், 13,157 ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ் கார்களில், பழுதை நீக்கியது. அதே ஆண்டில், செப்டம்பர் மாதம், மீண்டும் ஹோண்டா சியல் கார், 72,115 சிட்டி கார்களில், பவர் விண்டோ ஸ்விட்ச் பழுதை நீக்கியது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், 41,000 எதியோஸ் மற்றும் எதியோஸ் லிவா கார்களில், பெட்ரோல் டேங்குக்கான, இன்லெட் பைப் பழுதை நீக்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 70,000 நானோ கார்களில் பழுதை நீக்கி அளித்தது.
தற்போது, உற்பத்தி பழுதான கார்களை திரும்ப அழைத்து, பழுதை சீர் செய்து கொடுக்கும் நடைமுறை இந்தியாவில் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஆட்டோமொபல் உற்பத்தியாளர்கள் சங்கம்( சியாம்) ஆகியவை, மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையை, சியாம் அமைப்பு ஏற்கனவே தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|