பதிவு செய்த நாள்
03 ஜூன்2012
16:19
சென்னை துறைமுகத்தில் அதிகரித்து வரும் மின்சார செலவினங்களை குறைப்பதற்காக, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காற்றாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம் குறித்து, துறைமுக தலைவர் அட்டுல்யா மிஸ்ரா, சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். சென்னை ஐகோர்ட், நிலக்கரி மற்றும் இரும்புத்தாது சரக்குகளை கையாள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னை துறைமுகம் நிதி பற்றாக்குறை ஏற்படாமல் இயங்கி வருகிறது. மேலும், பெட்ரோலிய பொருட்கள் வாங்கல் மற்றும் பொது சரக்குகளை கையாள்வதன் மூலம் தனது நிலையை தக்க வைத்துள்ளது.
தமிழக அளவில், அதிக சரக்குகளை கையாளும், சென்னை துறைமுகத்துக்கு மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துறைமுக நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள செலவினங்களை காட்டிலும், மின்செலவு கூடுதலாக ஏற்படுகிறது. எப்படியிருந்தாலும், மின்சார பயன்பாட்டை தவிர்க்க முடியாது என்பதால், மாற்று மின் உற்பத்தி திட்டம் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.சென்னை துறைமுகம் 36 கோடி ரூபாயை உபரியாக கொண்டு, மொத்த வருவாயாக 62 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இந்நிதியாண்டில், பல்வேறு செலவினங்கள் கணக்கீட்டுக்கு பிறகு, ஆறு கோடி ரூபாயை நிகர உபரி வருவாயாக பெற முடியும். கடந்த ஆண்டை காட்டிலும், நிகர உபரி குறைவுக்கு, ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு குறைந்ததும் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜிவ்காந்தி ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் மற்றும் பன்மாதிரி சரக்கு போக்குவரத்து மையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.மேலும், துறைமுகத்தில் அதிகரித்து வரும் மின்சார செலவினத்தை குறைக்கும் வகையில், 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்தமிழகத்தில் காற்றாலை மின்சார நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|