பதிவு செய்த நாள்
04 ஜூன்2012
00:48
புதுடில்லி:நாட்டின் பருத்தி சாகுபடி பரப்பளவு, வரும் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என, இந்திய பருத்தி கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்ற 2010-11ம் பருவத்தில், 1.11 கோடி ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. இது, நடப்பு 2011-12ம் பருவத்தில், 1.22 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் பருத்தி உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தெளிவற்ற ஏற்றுமதி கொள்கை, குறைந்தபட்ச கொள்முதல் விலை அறிவிப்பதில் தாமதம், கூலி உயர்வு, வட மாநிலங்களில் வறண்ட மற்றும் அதிக வெப்ப நிலை போன்ற காரணங்களால், வரும் பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தை விட, 10 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநில விவசாயிகள், பருத்தி பயிரிடுவதை தவிர்த்து, நெல், கொத்தவரை, பருப்பு வகைகள், கரும்பு உள்ளிட்ட இதர பயிர் சாகுபடியில், கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால், இம்மாநிலங்களில், கணிசமான அளவிற்கு, இதன் சாகுபடி பரப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 78 லட்சம் பொதிகள் (1 பொதி-170 கிலோ) என்றளவில் இருந்தது. நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி சிறப்பாக உள்ளதால், இதுவரையிலுமாகவே இதன் ஏற்றுமதி, 1.20 கோடி பொதிகளை தாண்டியுள்ளது.அண்மையில், மத்திய வேளாண் அமைச்சகம், வரும் பருவத்திற்கு, ஒரு குவிண்டால் பருத்திக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 3,600-3,900 வழங்க பரிந்துரை செய்துள்ளது. நடப்பு பருவத்தில், இதற்கான விலை, 2,200-3,300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|