பதிவு செய்த நாள்
04 ஜூன்2012
00:58
தமிழகத்தில் மா சாகுபடிக்கு மானியம் வழங்குவதில், புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க தோட்டக்கலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், இதன் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் முக்கிய பழவகைகளில் ஒன்றாக மாம்பழம் உள்ளது. தட்பவெட்ப மாறுதல்களைத் தாங்கி வளரக் கூடிய மாம்பழம், மார்ச்-ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பழ வகைகளின் ராணி:பழச்சாறு ஜெல்லி, பழக்கூழ் மற்றும் ஊறுகாய் போன்ற பல வகை உணவுப் பொருட்கள் தயாரிக்க மாம்பழம் பயன்படுகிறது. வைட்டமின்,"ஏ' சத்து நிறைந்த "மா', பழ வகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
இந்திய அளவில், 23 லட்சம் ஹெக்டேரில் ஆண்டுக்கு, 1.50 கோடி டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. நாட்டின் மொத்த மா சாகுபடி பரப்பளவில், தமிழகத்தின் பங்களிப்பு, 6.5 சதவீதம் என்றளவிலும், மாம்பழம் உற்பத்தியில், 4.5 சதவீதம் என்றளவிலும் உள்ளது. தமிழகத்தில், ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 5,000 கிலோ மாம்பழம் உற்பத்தியாகிறது.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், திருவள்ளூர், தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மாம்பழம் விளைகிறது. இங்கு, பெங்களுரா, செந்தூரா, ஹூமாயுதின், அல்போன்சா, பங்கனபள்ளி, ருமானி, தோட்டா பூரி போன்ற மாம்பழ வகைகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
கிருஷ்ணகிரி:மாநிலத்தின் ஒட்டுமொத்த மா சாகுபடியில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 42 ஆயிரம் ஹெக்டேரில், 4 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரியில், ஓர் ஆண்டுக்கு, சராசரியாக, 1.75 லட்சம் டன் மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 46 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், விளையும் மாம்பழங்கள், வங்கதேசம், பஹ்ரெய்ன், பிரான்ஸ், குவைத், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், மாம்பழம் மற்றும் அதன் துணை பொருட்கள் ஏற்றுமதி மூலம், நம் மாநில விவசாயிகளுக்கு, 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.தமிழகத்தில், மாம்பழம் உற்பத்தியைப் பெருக்கவும், மா சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கவும், தோட்டக்கலைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம், ஒரு ஒட்டு மா செடி, 25 மற்றும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மானிய உதவி:மாநில தோட்டக்கலை துறை, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில், ஒட்டு மா செடிகளை குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஒரு பயனாளிக்கு, ஒரு ஹெக்டேர் பரப்பளவிற்கான மா செடிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு, நான்கு ஹெக்டேர் பரப்பளவிற்கு, மா ஒட்டுச் செடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நடவு செய்த பின், இரண்டு ஆண்டுகளுக்கு இயற்கை உரங்கள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களுக்காக, முதல் ஆண்டிற்கு,
24 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது ஆண்டிற்கு, 8,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில், தோட்டக்கலை இயக்ககத்தின் மூலம், அரசு தோட்டக்கலை பண்ணைகளிலிருந்து, 4,410 ஹெக்டேர் பரப்பளவிற்கு, 12 லட்சத்து 79 ஆயிரம் மா ஒட்டுச் செடிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், வழங்கப்படும் மானியத்தில், புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, 2012-13ம் ஆண்டில், மாநிலத்தின் மா சாகுபடி பரப்பு, 1.70 லட்சம் ஹெக்டேராக உயரும். இதையடுத்து, மாம்பழம் உற்பத்தி, 10.58 லட்சம் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@நரடி பயன்:இதுகுறித்து தோட்டக்கலை ஆணையர் டாக்டர் சந்தோஷ்பாபு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 56 தோட்டக்கலை பண்ணைகள் மூலம், மா ஒட்டு செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை, விவசாயிகள் நேரடியாக வாங்கி பயன்பெறலாம். நடப்பாண்டில், மா சாகுபடிக்கு வழங்கப்படும் மானியத்தில், புதிய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட அளவில் உள்ள, மாவட்டத் தோட்டக்கலை துணை இயக்குனரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.- வீ.அரிகரசுதன் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|