பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
04:22
சேலம்:தமிழகத்துக்கு தேவையான மாதுளை பழங்கள், மகாராஷ்டிர மாநிலம் சாங்கோலா, டில்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து வருவது வழக்கம். ஆனால், தற்போது பழங்களின் வரத்து அடியோடு நின்று விட்டது.கர்நாடக மாநிலம்:அதே நேரம், தமிழகத்தில் அதிகரித்து வரும் வெயில் தாக்கம் காரணமாக, மாதுளை பழங்களின் விற்பனையில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம், இரியூர் பகுதியில் இருந்து, குறைந்த அளவிற்கே மாதுளை பழங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
அதனால், மாதுளை பழங்களின் விலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை, மொத்த விற்பனை நிலையங்களில், 10 கிலோ எடை கொண்ட மாதுளை பழப்பெட்டி, 800 முதல், 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால், நேற்று அதே எடை அளவு கொண்ட பெட்டி, 1,800 முதல் 1,900 ரூபாய் வரையில் விற்பனையானது. ஒரே வாரத்தில் பெட்டிக்கு, 1,000 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.வரத்தில் Œரிவு:சில்லரை விலையில், கிலோ, 90 முதல், 110 ரூபாய் வரையில் விற்ற மாதுளை பழங்கள், தற்போது, 190 முதல், 225 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மாதுளை பழங்களின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்த பழங்களின் விலை, மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா, ராஜமுந்திரி பகுதிகளில் இருந்தே, தமிழகத்துக்கு சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வரும். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த பழங்களுக்கு, தமிழகத்தில் @தவை அதிகரித்துள்ளது.
சாத்துக்குடி:அதே நேரம், எதிர்பார்த்த வரத்து இல்லாததால், சாத்துக்குடி பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 40 முதல், 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சாத்துக்குடி பழங்கள், தற்போது, 55முதல், 60 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இந்த பழங்களின் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால், இவற்றின் விலை மேலும் உயரும் எனத் தெரிகிறது.
சேலம் பழ வியாபாரிகள் சங்க தலைவர் குப்புசாமி கூறியதாவது:மகாராஷ்டிர மாநில மாதுளை பழங்களின் வரத்து நின்று விட்டது. அதே நேரத்தில், குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பழங்களும் விற்று விட்டன.அதனால், கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் மாதுளை பழங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு:இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கர்நாடக வியாபாரிகள், மாதுளை பழத்தின் விலையை உயர்த்தி விட்டனர். மாதுளை பழங்களின் விலையில், வரலாறு காணாத வகையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.சாத்துக்குடி பழங்களின் வரத்தும் இல்லை. தற்போது சீசன் இல்லாத காரணத்தால், சாத்துக்குடி, மாதுளை பழங்களின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வு, ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் வரை தொடரும். சரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.இருந்த போதிலும், தற்போது விற்பனைக்கு வரும் பழங்கள் அனைத்தும் முதல் தரமான பழங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குப்புசாமி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|