பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
04:25
இந்தியாவின் ஏற்றுமதி, வரும் 2013-14ம் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி டாலராக (25 லட்சம் கோடி ரூபாய்) உயரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.வர்த்தக அமைச்Œர்:புது டில்லியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. அதனால், தேவைகள் குறைந்துள்ளன.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதனால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்த சவாலை, இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.இத்தகைய சூழலிலும், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி, புதிய நம்பிக்கையையும், தெம்பையும் ஊட்டி வருகிறது. இந்த நெருக்கடியான தருணத்திலும், இந்திய ஏற்றுமதியாளர்கள் சிறந்த அணுகுமுறையைக் கையாண்டு, நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவிபுரிந்து வருகின்றனர்.
இதனால், வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 50 ஆயிரம் கோடி டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ஏற்றுமதியாளர்கள், கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரிய சந்தைகளில் எதிர்நோக்கும் இடர்பாடுகளை சமாளிக்க, வர்த்தக நடவடிக்கைகளைப் பரவலாக்க முன் வர வேண்டும். புதிய சந்தைகளை அடையாளம் காண வேண்டும்.
பாரம்பரிய சந்தைகள்:சர்வதேச நிதி நெருக்கடியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உணர வேண்டும். இந்த நாடுகளின் பாரம்பரிய சந்தைகள் எப்போது இயல்புநிலைக்குத் திரும்பும் என கூறமுடியாது.
அதனால், இத்தகைய பாரம்பரிய சந்தைகள் மீண்டும் எழுச்சி காணும் வரை காத்திருக்காமல், புதிய சந்தைகளைக் கண்டறிந்து, அங்கு ஏற்றுமதி மேற்கொள்ள வேண்டும்.ஆப்ரிக்கா:இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 62 சதவீதம் (18 ஆயிரத்து 800 கோடி டாலர்- 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்) ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
அயல்நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காகவே "கவன ஈர்ப்பு சந்தை திட்டம்' என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில், 112 சந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இச்சந்தைகளில், இந்தியப் பொருட்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இது, ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பான வாய்ப்பைப் பெற்றுத் தரும்.
அதே சமயம், ஏற்றுமதியாளர்களும், தொடர்ந்து புதுமையாக சிந்தித்து, தங்கள் பொருட்களை சர்வதேச அளவில், சிறப்பான முறையில் சந்தைப்படுத்த முன்வர வேண்டும். குறிப்பாக, உலக நெருக்கடியால், ஏற்றுமதி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதியாளர்கள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு, பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். நடப்பு 2012ம் ஆண்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 3.23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,445 கோடி டாலராக (1 லட்சத்து 22 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) சற்றே உயர்ந்துள்ளது.
இது, கடந்த 2011ம் ஆண்டு, இதே மாதத்தில் 2,369 கோடி டாலராக (1 லட்சத்து 18 ஆயிரத்து 450 கோடி ரூபாய்) இருந்தது.புதிய வர்த்தக கொள்கை:மத்திய அரசு, புதியஅன்னிய வர்த்தகக் கொள்கையை அண்மையில் வெளியிட்டது. அதில், சென்ற 2011-12ம் நிதியாண்டின் ஏற்றுமதியை விட (30 ஆயிரத்து 370 கோடி டாலர்), நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏற்றுமதியை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி தள்ளுபடி, சலுகை காலம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|