பதிவு செய்த நாள்
13 ஜூன்2012
00:00
சென்னை:""நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும், சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்த, அரசு மட்டுமின்றி தனியார் முதலீடும் அவசியம்'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பொருளாதாரம்:சென்னையில், இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) மற்றும் ஜி.சி.இ.எல்.நிறுவனம் சார்பில்,"சரக்கு போக்குவரத்தில் அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.இதில், கருத்தரங்கு கை@யட்டை வாசன் வெளியிட்டு பேசியதாவது:
உலகமயமாக்கல் கொள்கைக்கு பின், நாட்டின் வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் முன்னணி நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தியா, விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இடம்பெறும். மத்திய அரசு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, தனியாருடன் இணைந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
செலவினம்: இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சரக்கு போக்குவரத்து செலவினம், 13 முதல் 14 சதவீதம் என்றளவில் அதிகமாக உள்ளது. இது, வளர்ந்த நாடுகளில், 7 முதல் 8 சதவீதம் என்றளவில் குறைவாக உள்ளது. சரக்கு போக்குவரத்திற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், இந்த செலவை குறைக்கலாம்.
சரக்குபோக்குவரத்து துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை அதிகரித்தல் போன்றவற்றிற்கு, அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு அரசு மட்டுமின்றி தனியார் முதலீடும் அதிகரிக்க வேண்டும்.கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 13.92 சதவீதம் என்றளவில் வளர்ச்சிகண்டுள்ளது. இதில், முக்கிய துறைமுகங்களின் வளர்ச்சி, 8.12 சதவீதமாகவும், சிறிய துறைமுகங்களின் வளர்ச்சி, 24.28 சதவீதம் என்றளவிலும் உள்ளது.
உற்பத்தி திறன்:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 268 கோடி டன்னாகவும், சரக்கு கையாளுதல், 176 கோடி டன்னாகவும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 94 கோடி டன்னிலிருந்து, 123 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நடப்பாண்டில், துறைமுகங்களில், 42 திட்டங்கள் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், 29 திட்டங்கள், தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு வாசன் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|