பதிவு செய்த நாள்
15 ஜூன்2012
01:03
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-மே), மொத்த நேரடி வரி வசூல், 52 ஆயிரத்து 232 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில், வசூலான தொகையை விட, 3.6 சதவீதம் (50 ஆயிரத்து 407 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலக்கு : நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வாயிலாக, 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 4 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது. ஆக, நடப்பு நிதியாண்டில், முந்தைய நிதியாண்டை விட, கூடுதலாக, 15.2 சதவீதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. சென்ற ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், நிகர நேரடி வரி வசூல், 35 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே இரு மாதங்களில் வசூலான தொகையை விட, 172.64 சதவீதம்
(12 ஆயிரத்து 956 கோடி ரூபாய்) அதிகமாகும். சென்ற நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, 16 ஆயிரத்து 900 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. இதனால், நிகர நேரடி வரி வசூல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்ற முழு நிதியாண்டில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, 95 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள், செலுத்திய மொத்த வரி, 2.82 சதவீதம் குறைந்து, 25 ஆயிரத்து 35 கோடி ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 329 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வருமான வரி : தனிநபர் வருமான வரி, 10.02 சதவீதம் வளர்ச்சிகண்டு, 25 ஆயிரத்து 344 கோடி ரூபாயிலிருந்து, 27 ஆயிரத்து 884 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. செல்வ வரி, 16.67 சதவீதம் குறைந்து, 18 கோடி ரூபாயிலிருந்து, 15 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பங்கு பரிவர்த்தனை வரி, 7.36 சதவீதம் உயர்ந்து, 503 கோடி ரூபாயிலிருந்து, 540 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|