பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:25
தமிழகத்தில் சிறுசேமிப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து வருகிறது. முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொடர்பான பிரச்னை தான், இந்த தொய்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில், நிதித் துறையின் கீழ் சிறுசேமிப்புத் துறை செயல்படுகிறது. அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள், மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதுடன், மாநில அரசுக்கு சிறந்த நிதி ஆதாரமாக உள்ளன.
நீண்ட கால கடன்:மாநிலத்தில், திரட்டப்படும் சிறு சேமிப்புத் தொகையில், 50 சதவீதம், அந்த மாநிலத்திற்கே, 9.5 சதவீத வட்டியில், நீண்டகால கடனாக, மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசு, விருப்பம் தெரிவித்தால், முழுத் தொகையும் கடனாக வழங்கப்படுகிறது. இந்த நிதி, மாநில அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை சரிக்கட்டுவதுடன், சமூகநலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.தற்போது, அஞ்சலக சேமிப்புக் கணக்கு, அஞ்சலக தொடர் வைப்பு, மூத்த குடிமக்கள் திட்டம், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், பொது சேமநல நிதி போன்ற சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
மத்திய அரசு, சென்ற ஏப்ரல் மாதம், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது. சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், மக்களிடையே சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறுசேமிப்புத் தொகையை திரட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
கமிஷன் தொகை:சிறுசேமிப்புத் திட்டத்தில், நான்கு வகையான முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். முகவர்கள் திரட்டும் முதலீடுகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் கமிஷன் வழங்குகின்றன. தற்போது, தமிழக சிறுசேமிப்புத் துறையில், 31 ஆயிரத்து 620 முகவர்கள் உள்ளனர். இதில், 23 ஆயிரத்து
489 பேர் பெண்கள்.:அஞ்சலக மாத வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், அஞ்சலக குறித்த கால வைப்பு திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தும், நிலைப்படுத்தப்பட்ட முகவர்களுக்கு, மத்திய அரசு, 1 சதவீதம் கமிஷன் தொகை வழங்கி வந்தது. இதற்கு, தமிழக அரசு கூடுதலாக, 0.5 சதவீதம் கமிஷன் வழங்கி வருகிறது.
பெண்கள் மட்டுமே முகவர்களாக செயல்படும் அஞ்சலக தொடர் சேமிப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு, 4 சதவீதம் கமிஷன் வழங்குகிறது. இதற்கு மாநில அரசு கூடுதலாக,
2 சதவீதம் வழங்குகிறது.மேலும், மத்திய அரசு, பொது வருங்கால வைப்பு நிதி முகவர்களுக்கு, 1 சதவீதமும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட முகவர்களுக்கு, 0.5 சதவீதமும் கமிஷன் வழங்கி வந்தது.மத்திய அரசு, சென்ற டிசம்பர் முதல் முகவர்களின், கமிஷன் தொகையை மாற்றி அமைத்ததுடன், மாநில அரசு, முகவர்களுக்கு வழங்கும் ஊக்க தொகைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி, நிலைப்படுத்தப்பட்ட முகவர்களின், கமிஷன் தொகை, 1 சதவீதத்திலிருந்து, 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான முகவர்களின் கமிஷன் தொகையை ரத்து செய்தது.
ஆர்வம் குறைவு:மேலும், புதிய முகவர்கள் நியமனம் மற்றும் புதுப்பித்தலுக்கு, காவல்துறையின் பரிந்துரைக் கடிதம் அவசியம் என அறிவித்துள்ளது. இது, முகவர்கள் மத்தியில், குறிப்பாக, பெண்களிடத்தில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதில் முகவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. மேலும், கமிஷன் குறைக்கப்பட்டதால், புதிய முகவர்களின் சேர்க்கையும், புதுப்பிப்பும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைந்துள்ளது. வரும் காலத்திலும் இந்த முதலீடுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கு:இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வட்டாட்சியர், சிறுசேமிப்பு உதவி இயக்குனர் பரிந்துரையின் பேரில், முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். பணம் கையாடல் செய்யும் முகவர்கள் உடனடியாக நீக்கப்பட்டு, போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும், சிறு சேமிப்புத் தொகையை திரட்ட இலக்கு நிர்ணயிக்கும். இதனால், மக்களிடத்தில் சேமிக்கும் ஆர்வம் தூண்டப்படுவதுடன், அரசுக்கும் நிதி கிடைக்கும். கடந்த 2007-08 முதல் சிறுசேமிப்பு வசூலுக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை.
இதனால், அடுத்து வந்த ஆண்டுகளில், நிகர வசூல் குறைந்து போனது.முகவர் நியமனத்தில், மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்க கூடியதாக இருந்தாலும், இது, மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முகவர்களுக்கு தேவையில்லை. மேலும், முகவர் நலனைப் பாதுகாக்கும் வகையில், ஏற்கனேவே வழங்கி வந்த, கமிஷன் தொகையை தொடர்ந்து வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|