பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
01:00
தங்கம் விலை உயர்ந்து வருவதால், லாப நோக்கம் கருதி, தங்க பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து (கோல்டு ஈ.டி.எப்.,), முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு, சென்ற மே மாதம், மேற்கண்ட திட்டங்களில் இருந்து 41 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. தங்க பரஸ்பர நிதி திட்டம்:இது, மிகப் பெரிய தொகை இல்லையென்றாலும், இது போன்ற நிலை, கடந்த 2008ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு, நடப்பாண்டு மே மாதத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று ஆண்டுகளாக, தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது. எனினும், சென்ற 2011-12ம் நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டிற்குப் பிறகு, இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளைத் திரும்ப பெறுவது மெல்ல அதிகரித்து வருகிறது.
இதற்கு, தங்கம் விலை உயர்ந்து வருவது தான் காரணம் என தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 10 கிராம் தங்கம் விலை, 17 ஆயிரம் ரூபாயாக இருந்தபோது கோல்டு.ஈ.டி.எப்-ல் முதலீடு செய்தவர்கள், தற்போது 10 கிராம் தங்கம் விலை, 30 ஆயிரம் ரூபாயை தாண்டி யுள்ளதால், லாபம் கருதி முதலீடுகளை திரும்ப பெற்று வருகின்றனர்.நடப்பாண்டு மட்டும், தங்கம் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 650 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு ஜூன் 13ம் தேதி நிலவரப்படி 29 ஆயிரத்து 860 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக, கடந்த ஐந்தாண்டுகளில் தங்கம் விலை 180 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு:இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முதலீட்டாளர்கள், மூன்றாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு, அதன் மதிப்பு உயரும் பட்சத்தில் தங்கம் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச பொருளாதாரம், இயல்பு நிலைக்குத் திரும்புகையிலும், தங்கம் விலை குறையும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் விலை தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். இதற்கு மேல் தங்கம் விலை, மிகப் பெரிய அளவில் உயர்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதாலும், முதலீட்டாளர்கள் கோல்டு.ஈ.டி.எப்.,ல் இருந்து வெளியேறி வருகின்றனர்.
சர்வதேச நிலவரம் சீராகி, தங்கம் விலை சரியும் போது மீண்டும் கோல்டு.ஈ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதுதான், இத்திட்டங்களில் இருந்து அதிக அளவில் முதலீடு வெளியேற காரணம் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.இறக்குமதி வரி:இது குறித்து பியர்லஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்ஷய் குப்தா கூறுகையில்,"தங்கம் விலை இனி பெரிதாக உயராது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் விலை ஏறுமுகத்தில் இருந்தது. இனி, இதே நிலை நீடிக்காது' என்றார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது ஆகியவை காரணமாக இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.தங்கம் விலை உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கோல்டு. ஈ.டி. எப்., திட்டங்களில் முதலீடு அதிகரித்து வந்தது கவலையளிப்பதாக இருந்தது.உதாரணமாக, கடந்த 2008-09 முதல் 2011-12ம் நிதியாண்டு வரை கோல்டு.ஈ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு 43 மடங்கு உயர்ந்து 84 கோடி ரூபாயில் இருந்து, 3,646 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து எஸ்.பீ.ஐ மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி நவ்நீத் முனோத் கூறும்போது,"மிகப் பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டாலோ, வரலாறு காணாத பணவீக்கம் அல்லது பணச்சுருக்கம் உண்டாகும்போது, அதன் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முதலீடாகவே தங்கம் கருதப்படுகிறது. மொத்த முதலீடு:முதலீட்டாளர்களின், ஒட்டு மொத்த முதலீட்டு இனங்களில், தங்கத்தின் பங்கு, பெரிய அளவிற்கு இல்லாமல் சிறிய அளவிற்கே இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இந்தியாவில், சென்ற மே இறுதி நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10 ஆயிரத்து 312 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 கோல்டு.ஈ.டி.எப்., திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இது, இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் இரண்டு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|