பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
01:00
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க் கிழமையன்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்காததாலும், 'பிட்ச்' நிறுவனம், இந்தியாவின் தரக் குறியீட்டை குறைத்ததாலும், திங்களன்று வர்த்தகம் சுணக்கம் கண்டது.இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இதன் காரணமாக, மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.குறிப்பாக, நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மருந்து, நுகர் பொருட்கள், எண்ணெய்,எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. இருப்பினும், ஸ்டெர்லைட், பீ.எச்.இ.எல்., இன்போசிஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
அமெரிக்க அரசு, அதன் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கும் என்ற மதிப்பீட்டால், தங்கத்தின் விலை, உயர்ந்து வருகிறது. கடந்த ஏழு தினங்களாக, இதன் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 153.97 புள்ளிகள் அதிகரித்து, 16,859.80 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,890 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,681.89 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 39.60 புள்ளிகள் உயர்ந்து, 5,103.85 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|