பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:44
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை, 4,100 கோடி டாலராக (2 லட்சத்து 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மதிப்பீட்டில், இந்த இலக்கு, 3,800 கோடி டாலராக (2 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக, தற்போது, ஜவுளி ஏற்றுமதி இலக்கு, கூடுதலாக, 300 கோடி டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 15 சதவீதம் சரிவடைந்திருந்த நிலையிலும், கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 3,400 கோடி டாலர் மதிப்பிற்கு இருந்தது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும்.ஜவுளி ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம், கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கு, முழு வரி விலக்கு வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்தது.
இது தவிர, அதிகளவில் தொழிலாளர்கள் பணிபுரியும் ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடைத் துறைகளுக்கு 2 சதவீத வட்டி மானிய சலுகை, வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜவுளி ஆலைகளுக்கு, நிவராணம் வழங்கும் வகையில், கடன் மறுசீரமைப்பிற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கான சலுகைத் திட்டங்கள், கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளன.மேற்கண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், ஜவுளி ஏற்றுமதி இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|