பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
11:36
சென்னை: சென்னை பல்லாவரம், வேளச்சேரி மற்றும் கொளத்தூரில், 231.68 கோடி ரூபாயில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப, சாலைக் கட்டமைப்பில் தேவையான மேம்பாடுகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.231.68 கோடியில் மேம்பாலங்கள்: இதன் ஒரு பகுதியாக, சென்னை, ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து, 80.74 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் மற்றும் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகின்றன. சென்னை, வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில், 98.22 கோடி ரூபாய் மதிப்பில், தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படுகிறது. சென்னை உள்வட்டச் சாலையில், கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப்பகுதியில், 52.72 கோடி ரூபாயில் பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில், மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடை பாதை அமைத்தல் என, 231.68 கோடி ரூபாயில், மேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சாலை விரிவாக்கம்: சென்னை நகரில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கப்படுவதன் காரணமாகவும், சென்னை விமான நிலையம் அருகே அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை விமான நிலையத்திற்கு அருகில் ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு கிலோ மீட்டர் வரை, 1.75 கோடி ரூபாய் செலவில் சாலையை அகலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|