பதிவு செய்த நாள்
04 ஜூலை2012
23:55
புதுடில்லி: மத்திய அரசு, 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், அதை விரைந்து செயல்படுத்த உணவு அமைச்சகம் முன்வராததால், போதிய கிடங்கு வசதியின்றி டன் கணக்கில் கோதுமை வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாட்டில், உணவு தானியங்கள் உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், அதை சேமித்து வைப்பதற்கு போதுமான கிடங்கு வசதிகள் இல்லாததால், வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 6.40 கோடி டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கும் அளவிற்கே கிடங்கு வசதிகள் உள்ளன. ஆனால், தற்போது, 8.20 லட்சம் டன் உணவு தானியங்களால் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. பருவ மழை துவங்கும் நிலையில், திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவை குழு, இந்திய உணவு கழகத்திலிருந்து, 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.மேலும், ஏற்றுமதிக்கான ஒரு டன் கோதுமையின் அடிப்படை விலையை 228 டாலராக நிர்ணயம் (12,400 ரூபாய்) செய்துள்ளது.இந்நிலையில், மத்திய அரசு, கோதுமை ஏற்றுமதியில், அவசரம் காட்டாது என, உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச சந்தையில், கோதுமை விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஒரே தவணையில் கோதுமை ஏற்றுமதி செய்ய தேவையில்லை. மாறாக, விலை அதிகரிக்கும் நேரத்திற்கு ஏற்ப ஏற்றுமதி மேற்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.எனினும், பருவ மழை தீவிரமடையும் நிலையில், திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இந்தியா, கோதுமை உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்குகிறது. சென்ற 2011-12ம் பயிர் பருவத்தில், 9.02 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது வரையிலுமாக, சாதனை அளவாக, 3.8 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததை அடுத்து, நேற்று, மொத்த விற்பனை சந்தையில், கோதுமையின் விலை குவிண்டால் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 1,220 ரூபாயாக உயர்ந்தது.கடந்த இரண்டு வாரங்களில், சிகாகோ வர்த்தக வாரியத்தில், இதன் விலை 20 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|