பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
01:29
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பல மாதங்களாக, 17,000 புள்ளிகளையே சுற்றி வந்த "சென்செக்ஸ்', நடப்பு வாரத்தில், 17,500 புள்ளிகளை தாண்டி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.
உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச சந்தை நிலவரங்களும், நன்றாகவே உள்ளன. அதனால், வரும் வாரத்திலும் காளையின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.சென்ற வெள்ளியன்று, லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 17 புள்ளிகள் குறைந்து, 17,521 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 10 புள்ளிகள் குறைந்து, 5,317 புள்ளிகளிலும் நிலை கொண்டன. ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில் மட்டும் "சென்செக்ஸ்' 122 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி:திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நடப்பு 2012-13 மற்றும் 2016-17ம் ஆண்டுகளுக்கிடையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி,9 சதவீத வளர்ச்சியை எட்டுவது கடினம் என்றும், அதே சமயம், 8 - 8.5 சதவீத வளர்ச்சியை எட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது, 8 சதவீத வளர்ச்சி என்பது, மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஐந்தாண்டு கால சராசரி வளர்ச்சி, :8 சதவீதம் என்றளவில் இருக்குமென்றாலும், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதம் வரை என்றளவில்தான் இருக்குமென அலுவாலியா மேலும் தெரிவித்துள்ளார்.இந்த மாதம், பொதுத் துறையைச் சேர்ந்த ராஷ்ட்டிரிய இஸ்பத் நிகம் நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது. பங்கின் வெளியீட்டு விலையை நியாயமான அளவில் நிர்ணயித்தால், அது, நிறுவனத்திற்கும், முதலீட்டாளர்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக, புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்கள், பங்குகளின் வெளியீட்டு விலையை மிகவும் அதிகமாக நிர்ணயித்ததால், அவை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, சரிவைக் கண்டன. இதனால், முதலீட்டாளர்கள் புதிய வெளியீடுகளில், பங்கேற்பதை வெகுவாக குறைத்துக் கொண்டனர். எனவே, புதிய வெளியீடுகளில், பங்கின் விலை நியாயமாக இருந்தால், வரவேற்பு கிடைக்கும்.
ரூபாய் மதிப்பு:கடந்த ஒரு சில வாரங்களாக, தொடர்ந்து சரிவடைந்து வந்த, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, தற்போது, வலுவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், மேற்கொள்ளும் முதலீடு அதிகரித்து வருவதுதான். மேலும், சாப்ட் வேர், ஏற்றுமதியாளர்கள், டாலரை அதிகளவில் விற்பனை செய்ததும், ரூபாய் மதிப்பு உயர்விற்கு வழிவகுத்தது.
குறிப்பாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, ஒரு ரூபாய் உயர்ந்தவுடன், பல ஏற்றுமதியாளர்கள், டாலர் மதிப்பு மேலும் சரிவடையும் என்ற நிலைப்பாட்டால், கையிருப்பில் இருந்த டாலரை விற்பனை செய்தனர். இதனால், டாலர் வரத்து அதிகரித்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில்...இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த ஒரு மாதத்தில், வர்த்தகம் 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது. என்றாலும், சிங்கப்பூர் பங்குச் சந்தை 7.9 சதவீதமும், ஹாங்காங்க் 6.9 சதவீதமும் கூடியுள்ளது.யெஸ் பேங்க், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் வாங்கலாம். லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்க உள்ளது. இதனால், விமான சேவை மற்றும் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எனவே, மேற்கண்ட துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கலாம்.
மின் உற்பத்தி:நாட்டின் மின் தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. போதிய அளவிற்கு நிலக்கரி இல்லாததால், நாட்டில் உள்ள பல அனல் மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதிய அளவிற்கு, மழை இல்லாததால், நீர் மின் திட்டங்களின் உற்பத்தியும் கேள்விக்குறியாகிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, அரசு, மின் உற்பத்தியை தொடர்ந்து நிலை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிடில், அது, நாட்டின் தொழில் துறை உற்பத்தியை பாதிப்பதுடன், பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரும் வாரம் எப்படி? நிறுவனங்கள், வரும் வாரத்திலிருந்து, இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட துவங்கும். அதுவும், பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். இதுவரை, பருவமழையின் அளவு குறைவாக உள்ளது. மழையின் அளவு அதிகரிக்கும் நிலையில், அது, வேளாண் உற்பத்தியை உயர்த்தும். ஒட்டு மொத்த அளவில், பங்கு வர்த்தகத்தை பாதிக்கும் அளவிற்கு, எவ்விதமான இடர்பாடுகளும் தென்படவில்லை. எனவே, வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து முன்னேற்றத்தை பார்க்கலாம்.
- சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|