பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
00:31
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் சணல் உற்பத்தி, 18 சதவீதம் சரிவடைந்து 93 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி= 332.5 கிலோ) குறையும் என, சணல் ஆலோசனை வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.
மழை பொழிவு:சணல் உற்பத்தியில் போதிய வருவாய் கிடைக்காத நிலையில், விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு தாவி வருகின்றனர். இதனால், சணல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. மேலும், சணல் பயிரிடும் பகுதிகளில் மழை பொழிவு குறைவாக உள்ளதாலும், அதன் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய சணல் ஆலைகள் கூட்டமைப்பு (இஜ்மா) தலைவர் மணிஷ் பொதார் கூறுகையில்,"கடந்த இரு வாரங்களாக, மேற்கு வங்கத்தின் தென் பகுதிகளில் மழைபொழிவு குறைவாக உள்ளது. இதனால், சணல் துறை கவலையடைந்துள்ளது. எனினும், வாரத்தின் கடைசி நாட்களில் மழை அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தை பொறுத்தவரை, சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் சணல் உற்பத்தி நன்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் சணல் உற்பத்தி 95 லட்சம் பொதிகள் முதல், ஒரு கோடி பொதிகள் வரை என்ற அளவில் இருக்கும்' என்று தெரிவித்தார்.
ஊரக வேலைவாய்ப்பு:நடப்பு நிதியாண்டில், சணல் பயிரிடும் பரப்பளவு 8.60 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 9.10 லட்சம் ஹெக்டேராக இருந்தது.ஒரு வகையில், மத்திய அரசின் சமூக மேம்பட்டு திட்டங்களும், மறைமுகமாக சணல் உற்பத்தி சரிவடைய காரணமாக உள்ளதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.மத்திய அரசு, சில ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 100 நாட்களுக்கு உறுதியாக வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு, இயற்கை இடர்பாடுகளை சார்ந்துள்ள சணல் விவசாயத்தில் ஆர்வம் குறைந்துள்ளது. அவர்கள், நிலையான வருவாயை எதிர்பார்த்து, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு செல்வது அதி கரித்து வருகிறது. குறிப்பாக, இந்த திட்டம் அறிமுகமான பிறகு, பாரம்பரியமாக சணல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த குடும்பங்கள் கூட, அத்திட்டப் பணிகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது.இதுவும், சணல் பயிரிடும் பரப்பளவு குறைய காரணமாகும்.
ஆனால் துறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 31 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால், அதனால் பயன் ஏதுமில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்குவங்கம்:சென்ற மார்ச் மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, ஒரு குவிண்டால் மூல சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 1,675லிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தியது. எனினும், ஒரு குவிண்டால் சணல் உற்பத்திக்கான செலவு 2,100 ரூபாயாக உள்ளது என, இத்துறையினர் தெரிவித்தனர். ஒரு ஹெக்டேரில் சராசரியாக 22 குவிண்டால் சணல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
கொள்முதல் விலை:சென்ற ஆண்டு, சணல் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, மேற்குவங்கம், முர்ஷிதாபாத் மாவட்ட விவசாயிகள், சணல் பயிரை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ரபி மற்றும் கரீப் பருவங்களில் ஊடுபயிராக சணல் பயிரிடப்படுகிறது.
மொத்த சணல் உற்பத்தியில், 5 சதவீதம் மட்டுமே ஆண்டுக்கு 16 லட்சம் டன் அளவிலான சணல் பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய சணல், எரிபொருளாகவும், உரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இந்தியாவில் மேற்குவங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|