பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
01:05
புதுடில்லி:நடப்பு ஜூலை 2 முதல் 13ம் தேதி வரையிலான 10 வர்த்தக தினங்களில், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 7,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தைகளில் இருந்து பெருமளவு, முதலீட்டை திரும்பப் பெற்றன.\
இந்நிலையில், நடப்பு மாத துவக்கத்தில் இருந்து அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு வெகுவாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய் :பிரணாப் முகர்ஜியின் விலகலுக்கு பிறகு, நிதி அமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுள்ளது, விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் அன்னிய முதலீட்டாளர்களின் கவனம், இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதிநிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அதே சமயம், ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இருவார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 1.2 சதவீதம் (216 புள்ளிகள்) சரிவடைந்துள்ளது.
சென்ற ஜூன் மாதம், பங்குச் சந்தையின் இறுதி வர்த்தக தினத்தன்று, 'சென்செக்ஸ்' 17,430 புள்ளிகளில் முடிவடைந்திருந்தது. இது, நடப்பு ஜூலை மாதம் 13ம் தேதியன்று 17,214 புள்ளிகளாக குறைந்து காணப்பட்டது.கெய்ரன் இந்தியாபங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து நிகர அளவில், 35 கோடி டாலர் (1,958 கோடி ரூபாய்) அளவிற்கு முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளன.
அதே சமயம், நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட நிகர முதலீடு 880 கோடி டாலராக (44 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.நடப்பு ஜூலை மாதம், ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 13 வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டில், கெய்ரன் இந்தியாவின் 3.5 சதவீத பங்கு விற்பனையும் அடங்கும்.இங்கிலாந்தின் கெய்ரன் எனர்ஜி பி.எல்.சி நிறுவனம், அதன் துணை நிறுவனமான கெய்ரன் இந்தியாவில் கொண்டிருந்த 3.5 சதவீத பங்குகளை 36 கோடி டாலருக்கு (2,000 கோடி ரூபாய்) விற்பனை செய்தது.
இந்த விற்பனை, அன்னிய நேரடி முதலீட்டு பிரிவின் கீழ் இடம்பெற்றதால், அன்னிய நிதி நிறுவனங்களின் வர்த்தக தகவலில் அடங்காது. எனினும், இந்த பரிவர்த்தனையில், குறிப்பிடத்தக்க அளவிலான முதலீட்டை அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்டதால், 'செபி' யின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த பரிவர்த்தனை, சென்ற ஜூன் 29ம் தேதி நடைபெற்றபோதிலும், இது குறித்த அறிவிப்பு நடப்பு ஜூலை 2ம் தேதி அன்று தான் வெளியிடப்பட்டது.ஒத்திவைப்பு:சென்ற மூன்று மாதங்களில் (ஏப்.,-ஜூன்), அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்ட போதிலும், நடப்பாண்டு துவங்கி இதுவரை, அவற்றின் நிகர முதலீடு, 1,000 கோடி டாலர் அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மந்தநிலை, வட்டி உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் உள்ளபோதிலும், அன்னிய முதலீடு அதிகரித்து வருவது, இந்தியா மீதான நம்பகத்தன்மைக்கு சான்றளிப்பதாக உள்ளது.ஊக்குவிப்பு திட்டங்கள்:மேலும், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இயங்கும் நிதியமைச்சகம், நிதிச்சந்தையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், இதற்கு நேர்மாறாக சிறிய அளவில் ஏதாவது நிகழ்ந்தால் கூட, நிலைமை தலைகீழாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, வரி ஏய்ப்பு தடுப்பு விதி குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் தனி குழுவை அமைத்துள்ளதும், இது அமலாவது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதும், அன்னிய முதலீடுகள் அதிகரிக்க துணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|