பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
01:09
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை, ஒரு சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.தகவல் தொழில்நுட்பத் துறையில், முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், டாலர் மதிப்பில் குறைந்திருந்தது. இது, மதிப்பீட்டு அளவை விட குறைவாகும். இதனால், சென்ற வியாழனன்று, இந்திய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் கண்டது.
அன்றைய தினம், பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு, இத்துறையில் முதலிடத்தில் உள்ள, டி.சி.எஸ். நிறுவனம், அதன் காலாண்டு முடிவை வெளியிட்டது.
இதன் செயல்பாடுகள், நன்கு இருந்ததை அடுத்து, வெள்ளியன்று பங்கு வர்த்தகம், சூடுபிடித்தது. ஆனால், மதியத்திற்கு பிறகு, உலக நிலவரங்களால், பல துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இதனால், வெள்ளியன்றும் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.சீனா:வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 12 புள்ளிகள் குறைந்து, 17,213.70 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 7 புள்ளிகள் சரிவடைந்து, 5,227 புள்ளிகளிலும் நிலைகொண்டன. ஒட்டுமொத்த அளவில், நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்', 178 புள்ளிகள் சரிவடைந்தது.
உலகளவில், பொருளாதார வளர்ச்சியில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு நிலையாகும். இது, உலகளவில் பங்கு சந்தைகளில் வர்த்தகத்தை பாதிப்பதாக அமைந்தது.
சுற்றுலா பயணிகள்:கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 4.32 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட, 4.8 சதவீதம் அதிகமாகும். சுற்றுலா பயணிகளின் வருகையால், இந்தியாவிற்கு, 6,485 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில், இவ்வகையில், 5,440 கோடி ரூபாய் கிடைத்திருந்தது. சுற்றுலா பயணிகளின் அதிக வருகையால், இந்தியாவில் உள்ள ஓட்டல்களின் வருவாய் கூடியுள்ளது. இதனால், இத்துறை நிறுவனங்களின் வருவாய் உயரக் கூடும்.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்:முருகப்பா குழுமத்தை சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் கியர்கள், கியர்பாக்ஸ்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், கோவையைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின், பெரும்பான்மை பங்குகளை, 292 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இது, அண்மை காலத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கையாகும். இதையடுத்து, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், புதிய துறையில் களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்தி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற மே மாதத்தில், 2.4 சதவீதம் என்றளவில் குறைவான வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில், இது, 6.2 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, இம்மாதம் 31ம் தேதி நடைபெற உள்ள, அதன் காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு குறைந்து வருவதற்கு, தங்கமும் ஒரு காரணம். ஏனெனில், தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், மதிப்புமிகு அன்னிய செலாவணி வெளியேறுகிறது. இந்தியாவில், வாங்கப்படும் தங்கம் வீடுகளில், சேமித்து வைப்பதற்கே பயன்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தங்க டெபாசிட் திட்டத்தின் மூலம் வீடுகளில், சேமித்து வைக்கப்பட்ட தங்கத்தை பயன்படுத்தி கொள்ள முடியுமா என யோசித்து வருகிறது.
க்ஷஇதனால், இறக்குமதி செலவினத்தை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. அரசின் திட்டப்படி, தங்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக, அதிகளவு தங்கம் கிடைக்கும் என்றாலும், பொது மக்களால், டெபாசிட் செய்யப்படும் தங்கத்திற்கு, அதிக வட்டி தந்தால், இத்திட்டம் வெற்றி அடைய வாய்ப்புள்ளது.ஏற்றுமதி:சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2,500 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 5.4 சதவீதம் குறைவாகும். இந்நிலையில், நாட்டின் இறக்குமதியும் குறைந்துள்ளது. இதனால், வர்த்தக பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால், ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி இலக்கை எட்ட முடியுமா என்ற அச்சப்பாடும் உள்ளது. எச்.டீ.எப்.சி.பேங்க், டி.டி.கே. பிரஸ்டீஜ், எச்.டீ.எப்.சி. நிறுவனம், டி.சி.எஸ்., இண்டஸ்இந்த் பேங்க் போன்றவற்றின் பங்குகளை, நீண்ட கால அடிப்படையில் வாங்கலாம்.
வரும் வாரம் எப்படி?:மேலும், பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், வரும் வாரத்தில் வர உள்ளன. நாட்டின் பல பாகங்களில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இது, நாட்டுக்கும், பங்கு சந்தைக்கும் வலுச் சேர்க்கும். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இருக்கும் நிலையில், அது பங்கு வர்த்தகத்தில் ஓரளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|