பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
14:00
பால் விலை உயர்வுக்குப் பின், நஷ்டத்தில் இயங்கி வந்த பால் கூட்டுறவு சங்கங்கள், லாபத்தில் இயங்கத் துவங்கி உள்ளன. இதன்மூலம், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்கும் நடவடிக்கையை, சங்கங்கள் எடுத்துவருகின்றன.
தமிழகத்தில் உள்ள நான்கு லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து, நாளொன்றுக்கு, 26 லட்சம் லிட்டர் பாலை, ஒன்பதாயிரம் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்கின்றன. உள்ளூர் தேவை போக, மீதமிருக்கும் பாலை, மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு அளிக்கின்றன.ஒன்றியங்கள், தங்களின் உள்ளூர் தேவைக்குப் போக, மீதமிருக்கும் பாலை, மாநில கூட்டுறவு இணையத்துக்கு அனுப்புகின்றன. மாநில பால் கூட்டுறவு இணையம் மட்டும், நாளொன்றுக்கு, 10 லட்சம் லிட்டர் பாலை கையாள்கிறது. சென்னையின் பால் தேவையில் பெரும் பகுதியை, கூட்டுறவு இணையம் தான் பூர்த்தி செய்கிறது.ரூ.412 கோடி நஷ்டம்கடந்த ஆண்டுகளில், பால் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்திவிட்டு, பால் விற்பனை விலையை உயர்த்தாமல் இருந்ததால், பால் கூட்டுறவு இணையம் மட்டும், 250 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தது.
மாநிலத்தில், 31 மாவட்டங்களில், 17 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், கோவை, கன்னியாகுமரி ஒன்றியங்கள், தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகின்றன. மற்ற 15 கூட்டுறவு ஒன்றியங்கள், 412 கோடி ரூபாய் நஷ்டத்தில்இயங்கின.விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலுக்கு, 45 நாட்கள் வரை பணம் கொடுக்க முடியாமல் இருந்தன.பால் விலை உயர்வு கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின், பாலின் விற்பனை விலை உயர்த்தப்படாமலே இருந்தது. இந்நிலை நீடித்தால், பால்கூட்டுறவு ஒன்றியங்கள் மூடப்படும் நிலைக்கு சென்றுவிடும். அரசு நிறுவனங்களான இவற்றின் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டியது அரசின் கடமை என, பால் விற்பனை விலையை, முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினர்.
கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து, பசும் பால் விலை லிட்டருக்கு, ஆறு ரூபாய், 25 காசும்; எருமைப் பால் விலை லிட்டருக்கு, இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டன. அதேபோல், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு, இரண்டு ரூபாய் உயர்த்தப் பட்டது.லாபம் அதிகரிப்பு அரசின் இந்த நடவடிக்கைக்குப் பின், பால் கூட்டுறவு இணையம், மாதத்துக்கு, நான்கு கோடி ரூபாய் லாபத்துக்கு வந்துள்ளது. இதேபோல், ஏற்கனவே லாபத்தில் இயங்கி வந்த, கோவை, கன்னியாகுமரி மாவட்ட ஒன்றியங்களைத் தவிர, 15 ஒன்றியங்களில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ஒன்றியங்கள், இன்னும் நஷ்டத்திலிருந்து மீளாமல் உள்ளன. மற்ற 13 ஒன்றியங்கள், 4.20 கோடி ரூபாய் லாபத்தை, மாதந்தோறும் ஈட்டி வருகின்றன என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
லாபம் தொடரும் நிலையில், மாநில கூட்டுறவு இணையத்தின் நஷ்டம், 250 கோடி ரூபாய் குறைந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் லாபத்துக்கு திரும்பும். அதேபோல், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின், 412 கோடி ரூபாய் நஷ்டம், அடுத்து மூன்று ஆண்டுகளில் குறைந்துவிடும் என்றும், பால் கூட்டுறவு ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பால் கூட்டுறவு ஒன்றியங்கள் தற்போது, பால் உபபொருட்களாக பால்கோவா, மேங்கோ, பைனாப்பிள், கேரட் மில்க் ஷேக் போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|