பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
01:12
புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, 32.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 21.80 லட்சம் டன்னாக இருந்தது என, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபிடா) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. சென்ற நிதியாண்டில், இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு, பாரம்பரிய சந்தைகளாக திகழும் மேற்காசிய நாடுகளில், இதற்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்பு:சென்ற நிதியாண்டில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,450 கோடியிலிருந்து, 16,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 29 சதவீதம் வளர்ச்சி கண்டு,249 கோடி டாலரிலிருந்து,322 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகளால்,டாலர் மதிப்பிலான ஏற்றுமதி வருவாய் சற்றே அதிகரித்துள்ளது."தற்போது, இந்தியாவிலிருந்து,மாதம் ஒன்றுக்கு மூன்று லட்சம் டன் என்றளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது' என,பாசுமதி அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்து வரும் முன்னணி நிறுவனத் தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுப்பாடு நீக்கம்:மத்திய அரசு, பாசுமதி அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், அதன் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது. இதனால் இதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.மேலும், ஈரான் நாடும் இந்திய பாசுமதி அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.கடந்த 2008-09ம் ஆண்டில்,15.50 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி மூலம்,9,447 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.2009-10ம் ஆண்டில், 10,889 கோடி ரூபாய் மதிப்பிற்கு 20.10 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. 2010-11ம் ஆண்டில், 21.80 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி மூலம் 10,578 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
இதனிடையே, இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை சீனா நீக்கியுள்ளதும், அதன் ஏற்றுமதி அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இருப்பினும், கணக்கீட்டு ஆண்டுகளில், டாலர் மதிப்பில் ஏற்பட்ட, ஏற்ற, தாழ்வுகளால் ஏற்றுமதி வருவாய் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
ஏற்றுமதிக்கு அனுமதி:சென்ற நிதியாண்டில், நாட்டின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், ஈரான், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.சென்ற நிதியாண்டில், பாசுமதி சாராத இதர வகை அரிசி ஏற்றுமதி, 50 லட்சம் டன்னை தாண்டியுள்ளது.உள்நாட்டில், நெல் உற்பத்தி சிறப்பாக வளர்ச்சி கண்டதை அடுத்து, மத்திய அரசு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாசுமதி அல்லாத சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது.
சென்ற வேளாண் பருவத்தில், உள்நாட்டில், 10.20 கோடி டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதன் உற்பத்தி, இலக்கை தாண்டி, 10.43 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்ரிக் காவை சேர்ந்த நைஜீரியா மற்றும் கானா நாடுகள், இந்தியாவின் சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு முக்கிய சந்தை களாக திகழ்கின்றன. சென்ற நிதியாண்டில், பாசுமதி மற்றும் சாதாரண அரிசி வகைகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 73 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில், பருவ மழை தாமதமானதால், பாசுமதி சாராத இதர நெல் வகைகள் குறைந்த அளவிலேயே பயிரிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் விதைப்பு காலம் முடிவடைந்து விட்டது. எனினும், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடவுப் பணிகள் நடைபெறும் என்பதால், விவசாயிகள், லாபம் தரும் பாசுமதி நெல் வகைகளுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவும் கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப்:பாசுமதி அரிசி விலை,சென்ற ஆண்டை விட, நடப்பாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரண மாகவும், பல விவசாயிகள் பாசுமதி நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், பாசுமதி அரிசி உற்பத்தியும், ஏற்றுமதியும் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப் பட்டுள்ளது.கடந்த ஆண்டு, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், 15.50 லட்சம் ஹெக்டேரில், பாசுமதி அரிசி பயிரிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|