பதிவு செய்த நாள்
20 ஜூலை2012
12:24
சென்னை: ஐந்து நட்சத்திர ஓட்டல்களில், மதுபான விற்பனை தொடர்பான சிறப்பு கட்டணம், நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக, 10 லட்ச ரூபாய் வரை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், தமிழ்நாடு மதுபான விற்பனைக்கான உரிமம் மற்றும் அனுமதி தொடர்பான விதிகளின் கீழ், விதி 17ன்படி, சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, இதுவரை, நான்கு லட்ச ரூபாய் சிறப்புக் கட்டணம் செலுத்தி வந்த ஓட்டல்கள், சென்னையாக இருந்தால், இனி, 10 லட்ச ரூபாயும், மற்ற மாவட்டங்களில், ஆறு லட்ச ரூபாயும், ஆண்டு சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும்.நான்கு நட்சத்திர ஓட்டலாக இருந்தால், ஒன்பது லட்ச ரூபாயும், மூன்று நட்சத்திர ஓட்டலாக இருந்தால், ஆறு லட்ச ரூபாயும், இரண்டு நட்சத்திர ஓட்டலாக இருந்தால், 4.5 லட்ச ரூபாயும், ஒரு நட்சத்திரம் உள்ளிட்ட இதர ஓட்டல்கள், மூன்று லட்ச ரூபாயும், சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும்.இதற்கான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணமாக, 1,000 ரூபாய், உரிமக் கட்டணமாக, 5,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும், உரிமம் பெற்ற ஓட்டல்களில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், கோவை மற்றும் மதுரையில் உள்ள விமான நிலையங்களில் செயல்படும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், 24 மணி நேர வர்த்தகத்திற்கு, இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மற்ற ஓட்டல்களில், காலை 11 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை, வர்த்தகம் அனுமதிக்கப்படுவதாக, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் கட்டண உயர்வு காரணமாக, நட்சத்திர ஓட்டல்களில், "சரக்கு' விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|