பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:15
மும்பை:சென்ற, 2011-12ம் சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), இந்தியாவின் மக்காச்சோளம் ஏற்றுமதி, 35 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமெரிக்க தானியங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஆசியாவில், மக்காச்சோளம் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா, மக்காச்சோளம் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தாலும், ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது.
இந்தியாவிலிருந்து, மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, மக்காச்சோளம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்ற 2010-11ம் வேளாண் பருவத்தில், நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தி, 2.17 கோடி டன்னாகவும், இதன் ஏற்றுமதி, 32 லட்சம் டன் என்றளவிலும் இருந்தது. இந்தியாவில், இதன் பயன்பாடு, 1.70-1.80 கோடி டன் என்றளவில் உள்ளது.
நடப்பு வேளாண் பருவத்தில், மக்காச் சோளம் உற்பத்தி, 2.16 கோடி டன் என்றளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, சர்வதேச அளவில், இந்திய மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. இதையடுத்து, நடப்பு சந்தை பருவத்தில், இதன் ஏற்றுமதி, 35 லட்சம் டன்னாக அதிகரிக்கும், என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்காச்சோள வர்த்தகர்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மலேசியா, வியட்நாம் மற்றும், இந்தோனேஷியாவை சேர்ந்த கால்நடை தீவன உற்பத்தியாளர்களுக்கு, அதிகளவில் இதனை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'நடப்பு வேளாண் பருவத்தில் இதுவரையிலுமாக, 31 லட்சம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதியாகியுள்ளது. அடுத்த இரு மாதங்களில், 4 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|