பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:46
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அடுத்த, 15 தினங்களுக்குள், இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்), நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 1.7 சதவீதம் குறைந்து, 7,520 கோடி டாலராக (4.13 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.மருந்து:மருந்து மற்றும் அது சார்ந்த துறை தவிர, பெரும்பாலான துறைகளின் ஏற்றுமதி மிகவும் குறைந்து போயுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளதார சுணக்க நிலையால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 36 ஆயிரம் கோடி டாலர் (19.80 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு சூழ்நிலைகளால், இந்த இலக்கை எட்ட முடியுமா? என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய வர்த்தக அமைச்சகம், ஏற்றுமதி சலுகைளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
கலந்தாய்வு கூட்டம்:ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, மத்திய வர்த்தக செயலர், எஸ்.ஆர்.ராவ், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர், அனுப் கே. பூஜாரி ஆகியோர் அடங்கிய குழு, மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் உள்ள ஏற்றுமதி கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியுள்ளது. சென்னை மற்றும் கோல்கட்டாவிலும், இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், வெளிநாடுகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள இடர்பாடுகள், ஆகியவற்றை களைய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் வங்கி உயரதிகாரிகளுடன், மத்திய வர்த்தக அமைச்சகம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.இலக்கை விஞ்சியது:கடந்த நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலர் (16.50 லட்சம் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் ஏற்றுமதி, இந்த இலக்கையும் விஞ்சி, 30,300 கோடி டாலராக (16.66 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (எப்.ஐ.இ.ஒ) தலைவர், எம்.ரபீக் அகமது கூறும்போது,'மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வட்டி செலவினம் அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில், ஏற்பட்டுள்ள அதிக ஏற்ற, தாழ்வுகள் போன்றவை ஏற்றுமதியாளர்களுக்கு சவாலாக உள்ளன. எனவே, மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சலுகை திட்டங்களை வழங்க வேண்டும்' என்றார்.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர், அனுப் பூஜாரி கூறியதாவது:மத்திய அரசு, வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், மலிவு விலை பொருட்களின் இறக்குமதியை தடுக்க, அத்தியாவசியமற்ற பல பொருட்கள் மீது, பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 5 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. அதேசமயம் இறக்குமதி, 15 சதவீதம் என்றளவில் Œரிவடைந்திருந்தது. ஆக, ஏற்றுமதியை விட, இறக்குமதி குறைந்ததை அடுத்து, கடந்த, 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது. இவ்வாறு பூஜாரி தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 20 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தங்க இறக்குமதி மதிப்பு, 22 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. தங்க இறக்குமதி மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், இதன் இறக்குமதி குறைந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், வர்த்தக பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளதாக, மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|