பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:49
கடந்த ஒரு சில வாரங்களாக, நன்கு இருந்த நாட்டின் பங்கு வர்த்தகம், தற்போது, சுணக்கம் கண்டுள்ளதால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"சென்செக்ஸ்' மீண்டும், 17 ஆயிரம் புள்ளிகளை சுற்றியே வந்து கொண்டுள்ளது. இதுவரை, காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள, பல நிறுவனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், சந்தையில் ஒரு சோர்வு நிலை காணப்படுகிறது.
வெள்ளியன்று "சென்செக்ஸ்,' 120 புள்ளிகள் சரிவடைந்து, 17,158 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 38 புள்ளிகள் குறைந்து, 5,205 புள்ளிகளிலும் நிலை கொண்டன. ஒட்டு மொத்த அளவில், இழப்பு அதிகமில்லை என்றாலும், உலக சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பங்கு வர்த்தகம் நடப்பு வாரத்தில், சரிவடைந்தே இருந்தது. நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்'55 புள்ளிகள் மட்டுமே உயர்ந்திருந்தது.
பரஸ்பர நிதி துறை:கடந்த 2008ம் ஆண்டில், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்திருந்த பல முதலீட்டாளர்கள், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து மகிழ்ச்சியாக இருந்தனர். ஏனெனில், அவர்கள் முதலீடு செய்திருந்த பல பரஸ்பர நிதி திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு, (என்.ஏ.வி) சற்று உயர தொடங்கியிருந்தது. இதனால், இழப்பு குறைந்து வந்தது.இந்நிலையில், பங்கு வர்த்தகம் மீண்டும் சுணக்கம் கண்டுள்ளதால், இந்த முதலீட்டாளர்கள் மீண்டும், கவலை கொண்டுள்ளனர்.
இருப்பினும், பல பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்லளவில் வருவாய் பெற்று தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு காலத்தில், ரிலையன்ஸ், டாட்டா ஆகிய நிறுவனங்கள் தான் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், தற்போது, இந்நிறுவனங்கள் தரப்பட்டியலில் இறக்கம் கண்டு வருகின்றன.
மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்து, டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை நான்காவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
நீண்ட கால அடிப்படையில், மகிந்திரா அண்டு மகிந்தரா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். மாருதி நிறுவனத்தில் நடக்கும் பிரச்னைகளால், அதன் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்படலாம்.காலாண்டு முடிவுகள்:பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லை. கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, இதன் லாபம், 21 சதவீதம் குறைந்துள்ளது.
ஆக்சிஸ் பேங்க்:ஆக்சிஸ் பேங்கின் காலாண்டு முடிவு நன்கு அமைந்துள்ளது. குறிப்பாக, இதன் லாபம், 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வங்கி, அதிகளவில் சிறிய கடன்களை வழங்கியுள்ளதால் இதன் வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது.பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 1 சதவீதம் தான் கூடியுள்ளது. இந்நிறுவனத்தின் வாகன விற்பனை மற்றும் ஏற்றுமதி குறைந்ததால், இதன் லாபம் குறைந்துள்ளது.இதுவரை வெளிவந்துள்ள காலாண்டு முடிவுகளை பார்க்கையில், தனியார் துறை வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது. இதை, முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா புல்ஸ், யுனைடெட் பாஸ்பரஸ் போன்ற நிறுவனங்களின் லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைந்துள்ளது.வாங்கக்கூடிய பங்குகள்:தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளின் விலை, தற்போது குறைந்துள்ளது. எனவே, இவற்றின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கி வைக்கலாம். இவ்வகையில், ஆரக்கிள் பைனான்சியல் சர்வீஸ், டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., எச்.சி.எல்., ஹக்ஸாவேர் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
வங்கி துறை:ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று, வங்கிகளின் திருத்தி அமைக்கப்பட்ட கணக்குகளுக்காக, அதிகளவில் தொகையை ஒதுக்க வேண்டும், என பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, ஒதுக்கீட்டு தொகை, 2 சதவீதம் முதல், 5 சதவீதம் வரை உயரலாம். இக்குழுவின் அறிக்கையால், வங்கி பங்குகளின் விலை, 1 சதவீதம் வரை சரிவடைந்தது.
இருப்பினும், ஆக்சிஸ் பேங்க், எச்.டீ.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், எஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா போன்றவற்றின் பங்குகளை வாங்கலாம்.
நடப்பு வாரத்தில் ஜெர்மன், ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. ஆனால், இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.வரும் வாரம் எப்படி?வரும் வாரத்தில், மேலும் பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை.மழை பொழிவு போதிய அளவிற்கு இருந்தால் தான், வேளாண் உற்பத்தி பெருகும். அது பங்குச் வர்த்தகத்திற்கும் வலுச் சேர்க்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|