பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:38
நடப்பு நிதியாண்டின், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பின் வளர்ச்சியில், மும்பை உள்ளிட்ட, ஐந்து நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை சரிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாகவும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும், பரஸ்பர நிதி துறையின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது.
மந்தநிலை:இதையடுத்து, அண்மையில் பரஸ்பர நிதி துறையில், அதிக அளவில் முகவர்களை ஈர்க்கவும், முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடனும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், வரும் மாதங்களில் பரஸ்பர நிதி துறை, மந்தநிலையில் இருந்து விடுபட்டு, புத்துணர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பரஸ்பர நிதி துறை, கடந்த சோதனை காலத்திலும், ஓரளவிற்கு வளர்ச்சி காண, நாட்டின் முக்கிய ஐந்து நகரங்கள் துணை புரிந்துள்ளன என்பது,
இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்ற ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டை விட 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டு 6.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மும்பை, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை ஆகிய நகரங்களை பொறுத்தவரை, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2.5 சதவீதம் உயர்ந்து 73.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய காலாண்டில் (ஜன.,-மார்ச்) 71.12 சதவீதமாக காணப்பட்டது.
முந்தைய மூன்று காலாண்டுகளாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சரிவடைந்து வந்த நிலையில், இது, சென்ற நிதியாண்டில், வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, இத்துறை, வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. எனினும், மதிப்பீட்டு காலத்தில், பெங்களூரு, சென்னை, கோல்கட்டா ஆகிய மூன்று நகரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முந்தைய காலாண்டை விட சரிவடைந்திருப்பது, கவலையளிப்பதாக இத்துறையினர்
தெரிவித்தனர்.
சென்ற ஜூன் வரையிலான காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், மும்பை நகரின் பங்களிப்பு 44.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 42.13 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. ஆக, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், மும்பை நகரத்தின் பங்களிப்பு 2.35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அது போன்று, இதே காலாண்டுகளில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், டில்லி நகரின் பங்களிப்பு 0.53 சதவீதம் உயர்ந்து, 13.23 சதவீதத்தில் இருந்து 13.76 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
பெங்களூரு:அதே சமயம், இதே காலாண்டுகளில், பெங்களூருவின் பங்களிப்பு 0.11 சதவீதம் குறைந்து, 5.54 சதவீதத்தில் இருந்து, 5.43 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இவ்வகையில், கோல்கட்டா நகரின் பங்களிப்பும் 0.09 சதவீதம் குறைந்து 5.42 சதவீதத்தில் இருந்து 5.33 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டுகளில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், சென்னையின் பங்களிப்பு 0.14 சதவீதம் குறைந்து 4.80 சதவீதத்தில் இருந்து 4.66 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
சிறிய நகரங்கள்:பரஸ்பர நிதி துறையின் வளர்ச்சிக்கு, பெரிய நகரங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய நகரங்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களை சிறிய, மிகச் சிறிய நகரங்களுக்கு கொண்டு செல்வது குறைவாகவே உள்ளது. எந்த நிறுவனமும், நாடு முழுவதும் பரவலாக, அதன் திட்டங்களை விரிவுபடுத்தாத நிலை உள்ளது.
இது குறித்து, பரஸ்பர நிதி நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," நிறுவனங்களின் முக்கிய வர்த்தகம் மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இருந்து தான் வருகிறது. அதனால் இந்நகரங்களில், பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பின் பங்களிப்பும் உயர்ந்து வருகிறது. சிறிய நகரங்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது ' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|