பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:40
ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து குவிந்து வரும் மலிவு விலை உருக்குப் பொருட்களால், உள்நாட்டு உருக்குத் துறை நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, , சுரங்க முறைகேடு, நில ஒதுக்கீடு பிரச்னைகளால் இந்திய உருக்குத் துறையின் வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், தற்போது மலிவு விலை உருக்கு பொருட்கள், புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
ஒப்பந்தம்:இந்தியா, பல்வேறு ஆசிய நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.,) செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன், ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சி.ஈ.பி.ஏ.,) கையொப்பமாகி, நடைமுறைக்கு வந்துள்ளது.இதன்படி, இந்நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் பரஸ்பர வர்த்தகத்தில், குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதி தீர்வை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழுவதுமாக நீக்கப்படும்.
இந்த வகையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு பொருட்களுக்கு, இறக்குமதி தீர்வை 3.125 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, ஜப்பானிய உருக்கு பொருட்களின் இறக்குமதிக்கு 3.3 சதவீதமாக உள்ளது. வரும் 2017ம் ஆண்டு இந்த தீர்வையும் விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி சலுகைகள்இது போதாதென்று, ஜப்பான், கொரிய அரசுகள், உள்நாட்டு உருக்குத் துறைக்கு பல்வேறு வரிச் சலுகைகள் வழங்கி வருகின்றன.இதனால், இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருட்களின் விலை, உள்நாட்டை விட மலிவாக உள்ளது.
இதன் காரணமாக, சென்ற 2011-12ம் நிதியாண்டில், கொரியாவில் இருந்து வெப்ப உருட்டு உருக்கு இறக்குமதி 125 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோன்று, ஜப்பானில் இருந்தும் வெப்ப உருட்டு உருக்கு இறக்குமதி, முந்தைய நிதியாண்டை விட, 72 சதவீதம் உயர்ந்துள்ளது.இதே நிலை தொடர்ந்தால், உள்நாட்டு உருக்கு துறை கடுமையாக பாதிக்கப்படும் என்பதோடு, இத்துறையில் அன்னிய முதலீடும் குறையும் என்று குரலெழுந்தது. அதனால், சி.ஈ.பி.ஏ பட்டியலில் இருந்து உருக்கு பொருட்களை நீக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு, ஜப்பான் மற்றும் கொரியா தவிர்த்த இதர நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட உருக்கு பொருட்களின் இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.கொரியாவில் இருந்து, சென்ற 2010-11ம் நிதியாண்டில், குளிர் உருட்டு உருக்கு இறக்குமதி 3.09 லட்சம் டன்னாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில் 4.41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதே ஆண்டுகளில், உருக்கு தகடுகள் இறக்குமதி 18.7 லட்சம் டன்னில் இருந்து 22.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் இருந்து, இதே ஆண்டுகளில் குளிர் உருட்டு உருக்கு இறக்குமதி 33.1 லட்சம் டன்னில் இருந்து 33.9 லட்சம் டன்னாகவும், உருக்கு தகடுகள் இறக்குமதி 16.2 லட்சம் டன்னில் இருந்து 28.6 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.
உருக்கு தகடு:இந்தியாவின் ஒட்டுமொத்த உருக்கு தகடு இறக்குமதியில், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நவ.,-டிச., மாதங்களில் இது, 400-600 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இத்தகைய போக்கால், உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே, ஜப்பானை சேர்ந்த கோப், ஜே.எப்.ஈ., சுமிடோமோ, நிப்பான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனம், இந்திய உருக்கு துறையில் களமிறங்குகிறது. இந்நிறுவனங்கள், அவற்றின் தாய்நாட்டில், சலுகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் உருக்கு பொருட்களை, இந்தியாவில் குவிக்க வாய்ப்புள்ளது.
அன்னிய நேரடி முதலீடு:இந்நிறுவனங்களுக்கு, இந்தியாவில் உருக்கு தொழிற்சாலையை துவங்குவதை விட, மேற்படியான வர்த்தகம், அவற்றுக்கு லாபம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.இதன் விளைவாக, இந்திய உருக்குத் துறையில் அன்னிய நேரடி முதலீடு சரிவடையும். இது, அன்னிய முதலீட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|