பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
05:05
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ளது.பருவமழை குறைவு, பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இல்லாதது மற்றும் மத்திய அரசு, எதிர்பார்த்த சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது போன்றவற்றால், நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது.
நிதி நெருக்கடி:இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படாததால், உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது . இதன் தாக்கம், இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், முன்பு கூடியதை வைத்து, பெட்ரோலிய நிறுவனங்கள், அண்மையில், பெட்ரோல் விலையை உயர்த்தின.வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, அன்றைய தினம், "சென்செக்ஸ்' 199 புள்ளிகள் அதிகரித்து, 16,839 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 57 புள்ளிகள் உயர்ந்து, 5,100 புள்ளிகளிலும் நிலை கொண்டன. ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்' 38 புள்ளிகள் சரிவடைந்திருந்தது.
லார்சன் அண்டு டூப்ரோ:பல துறைகளில் கால் பதித்து நன்கு செயல்பட்டு வரும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், தற்போது, துறைமுக துறையிலும் களமிறங்கியுள்ளது.
இந்நிறுவனம், 4,675 கோடி ரூபாய் திட்ட செலவில், தமிழக அரசின் டிட்கோவுடன் இணைந்து, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளி என்ற இடத்தில், துறைமுகத்தை அமைத்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வளர்ச்சிக்கு இத்துறைமுகம் வழிவகுக்கும்.
சென்ற வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எச்.டீ.எப்.சி. வங்கி பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது. இதையடுத்து, வங்கி துறையில் இதுவரை முதலிடத்தில் இருந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, எச்.டீ.எப்.சி. முதலிடத்தை பிடித்தது. இதன் பங்குகளை வாங்கலாம் என இப்பகுதியில், ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
காலாண்டு முடிவுகள்:பீ.எச்.இ.எல்., யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தேனா பேங்க், தாமஸ் குக், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐடியா செல்லுலார், பாட்டா, இந்துஸ்தான் யூனிலிவர், ராலீஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு உள்ளன.
என்.டி.பி.சி. நிறுவனம், ஒரு சில காலாண்டுகளுக்கு பிறகு, சென்ற காலாண்டு லாபம், முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் லாபம், சென்ற காலாண்டில் 36 சதவீதம் கூடியுள்ளது.வாங்க கூடிய பங்குகள்:பாட்டா இந்தியா, இந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் போன்றவற்றின் பங்குகளில், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். எச்.சி.எல்., நிறுவன பங்குகளின் விலை ஒரு வாரத்தில், அதிகளவில் ஏற்றத்தை கண்டுள்ளன.
உருக்கு துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை, சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. அதேசமயம், இத்துறை நிறுவன பங்குகளின் விலை, மேலும் குறையும் நிலையில், அவற்றின் பங்குகளை குறைந்த அளவில் வாங்கி வைக்கலாம்.வரும் வாரம் எப்படி இருக்கும்?பருவமழை குறைந்துள்ளதும், மத்திய அரசின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படாததாலும், பங்கு வர்த்தகம் சூடுபிடிக்காமல் உள்ளது. பங்கு சந்தைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகலாம்.கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரித்துள்ளதும்சந்தையை நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. இதனால், வரும்வாரத்தில் பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்படலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|