பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
05:24
புதுடில்லி:நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், மத்திய அரசின் பொது கடன், 37.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இருந்தைவிட, (35.78 லட்சம் கோடி ரூபாய்) 4.9 சதவீதம் அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன்:மத்திய அரசின் மொத்த கடனில், உள்நாட்டிலிருந்து திரட்டப்பட்ட கடன் மதிப்பு, 33.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, மத்திய அரசின் மொத்த கடனில், 90.6 சதவீதமாகும். இது, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 90.1 சதவீதம் என்றளவில் இருந்தது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டீ.பி.), மத்திய அரசின் உள்நாட்டு கடன், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 33.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இது, 36.4 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு 2012 - 13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் மதிப்பீட்டின் படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 5.8 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டை விட குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நேரடி வரி வசூல் உயர்ந்துள்ளதுடன், அரசின் மூலதன செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கடன் பத்திரங்கள்:சென்ற காலாண்டில், மத்திய அரசு, 1.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 30.4 சதவீதமாகும். அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், இது, 28.2 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது.
இருப்பினும், அரசின் நிகர கடன், 1.12 லட்சம் கோடி ரூபாய் அல்லது 23.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், மத்திய அரசின் நிகர கடன், 31.1 சதவீதம் என்றளவில், மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இச்சூழ்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசு, 60,574 கோடி ரூபாயை திரும்ப அளித்ததால், அரசின் நிகர கடன் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரி வசூல்:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், மத்திய அரசின் மொத்த வரி வசூல், பட்ஜெட் மதிப்பீட்டில், 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே இரு மாதங்களில், மொத்த வரி வசூல், பட்ஜெட் மதிப்பீட்டில், 6.6 சதவீதம் என்றளவில் தான் இருந்தது. நாட்டின் மொத்த வரி வசூலில், நேரடி வரியின் கீழ், நிறுவன வரி வசூல், 10,137 கோடியாக வளர்ச்சிகண்டுள்ளது.
தனிநபர் வருமான வரி வசூல்,44.2 சதவீதம் அதிகரித்து 25,999 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீடான 13.9 சதவீதத்தை விட அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - மே மாதங்களில், மத்திய அரசின் மறைமுக வரி வசூல் சற்று குறைந்துள்ளது. சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி முறையே, 2 சதவீதம் மற்றும் 4.6 சதவீதம் என்றளவில் பின்னடவை கண்டதே இதற்கு காரணம்.
ஆனால், பட்ஜெட் மதிப்பீட்டில்,மேற்கண்ட இரு பிரிவுகளின் வாயிலான வசூல், முறையே, 22 சதவீதம் மற்றும் 29.1 சதவீதம் என்றளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதே இரண்டு மாதங்களில், சேவை வரி வசூல், பட்ஜெட் மதிப்பீட்டான, 30.5 சதவீதத்தை விட, அதிகமாக 37.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சிகண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - மே மாதங்களில், மத்திய அரசின் செலவினம், 12.8 சதவீதமாக குறையும் என பட்ஜெட் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே இரு மாதங்களில், 13.2 சதவீதமாக இருந்தது.
நிதி பற்றாக்குறை:அரசின் செலவினங்கள் குறைந்துள்ளதால், மேற்கண்ட இரு மாதங்களில், மத்திய அரசின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், உள்நாட்டில் பணப்புழக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, நாளை அறிவிக்க உள்ள அதன் நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து, 4.25 சதவீதமாக குறைக்க வாய்ப்புள்ளது.ஆனால், வங்கிகளுக்கான,"ரெப்போ ரேட்' விகிதங்கள் குறைப்பதற்கானசாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது என வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|