பதிவு செய்த நாள்
30 ஜூலை2012
23:49
சென்னை,: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்கின் மொத்த வர்த்தகம், ஜூன் மாதம் வரையிலுமான காலத்தில், 3,33,248 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட (2,70,320 கோடி ரூபாய்) 23.28 சதவீதம் அதிகமாகும் என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.நரேந்திரா தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வங்கி, 233.44 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 205.58 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 13.55 சதவீதம் அதிகரித்துள்ளது.இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய், 24.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,331.77 கோடியிலிருந்து, 5,402.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கியின் நிகர வட்டி வருவாய், 11.84 சதவீதம் உயர்ந்து, 1,187.63 கோடியிலிருந்து, 1,328.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் வரையிலுமாக, வங்கி திரட்டிய டெபாசிட் 1,84,882 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 1,51,173 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, திரட்டப்பட்ட டெபாசிட் 22.30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், வங்கி வழங்கிய கடன்கள், 24.52 சதவீதம் அதிகரித்து, 1,19,148 கோடியிலிருந்து, 1,48,366 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நரேந்திரா கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|