பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:43
புதுடில்லி: முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர், மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், நேற்று முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:உற்பத்தியும், ஏற்றுமதியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.இந்த இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.பணவீக்கம்நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். விரைவில், நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அரசு கொள்கைளில் மாற்றம் செய்யப்படும்.உணவுப் பொருள்களின் கையிருப்பை பயன்படுத்தி, அதன் விலையை கட்டுக்குள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், உணவுப் பொருள் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம், பற்றாக்குறை சமாளிக்கப்படும். அடுத்த ஒரு சில வாரங்களில், பரஸ்பர நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். அடிப்படை கட்டமைப்பு பெரிய திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக 1,000 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான திட்டங்களை கண்காணிக்கும் வகையில் "முதலீட்டு கண்காணிப்பு திட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, நிதியமைச்சரை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து அமைச்சருடன் விவாதித்தாக தெரிவித்தார். விரைவில் மீண்டும் அமைச்சருடன் விரிவாக பேச உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|