பதிவு செய்த நாள்
17 ஆக2012
00:35
புதுடில்லி:நடப்பு எண்ணெய் பருவத்தின் (நவ., - அக்.,), நவம்பர் முதல் ஜூலை வரையிலான, மூன்று காலாண்டுகளில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 72.65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில், 60.43 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில் மட்டும், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 5 சதவீதம் சரிவடைந்து, 9.13 லட்சம் டன்னிலிருந்து, 8.70 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஜூன் மாதத்தில், 9 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 8.63 லட்சம் டன்னிலிருந்து, 7.83 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.) தெரிவித்துள்ளது.தொடர்ந்து நான்கு மாதங்களாக அதிகரித்து வந்த, தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற ஜூன் மாதம் முதல் சரிவடைந்து வருகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல், நடப்பாண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 80 சதவீதம் உயர்ந்து, 7,36,985 டன்னிலிருந்து, 13,25,163 டன்னாக அதிகரித்துள்ளது.நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதியில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பங்களிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா பாமாயில் இறக்குமதி 81 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.
இந்தோனேஷியா, சுத்தி கரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதிக்கு, 9 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், கச்சா பாமாயில் ஏற்றுமதிக்கு, 18 சதவீதம் வரிவிதித்துள்ளதே, இதன் இறக்குமதி குறைவிற்கு முக்கிய காரணம்.நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி வரையிலுமான காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் கையிருப்பு, 16.25 லட்சம் டன்னாக உள்ளது என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|