பதிவு செய்த நாள்
17 ஆக2012
00:52
மும்பை:சென்ற மே மாதம் முதல் தற்போது வரையிலுமாக, உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை, 40 சதவீதம் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால், தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்ததே, இதற்கு முக்கிய காரணம்.
கிராமப்புறம்:உள்நாட்டில், தங்கம் விற்பனையில், கிராமங்களின் பங்களிப்பு, 70 சதவீதம் என்றளவில் உள்ளது. இப்பகுதிகளில் பருவமழை குறைவால், தங்கம் விற்பனை சரிவடைந்துள்ளது.தங்கம் விலை உயர்வு, இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் பருவமழை பற்றாக்குறை போன்றவற்றால், தங்கத்திற்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது என, மும்பை தங்கம்,வெள்ளி விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார்.
இது தவிர, கடந்த ஒரு மாதத்தில், நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதியும் 7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், உள்நாட்டில், தங்கத்திற்கான தேவையில், மந்த நிலை நிலவி வருகிறது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜி.ஜே.இ.பி.சி.) தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தை:சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கவில்லை. மாறாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், இதன் இறக்குமதி செலவினம் அதிகரித்து, உள்நாட்டில் இதன் விலை மிகவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே தங்கத்திற்கான தேவை மிகவும் குறைந்துள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி. தலைவர் ராஜீவ் ஜெயின் தெரிவித்தார்.
மத்திய அரசு விதித்துள்ள, 2 சதவீத உற்பத்தி வரி, நாட்டின் தங்க ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் முதல் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, சென்ற செவ்வாயன்று, 10 கிராம் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாய் என்றளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 38 சதவீதம் குறைந்து, 181 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 294 டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு பாதியாக குறைந்து, 56 டன் என்றளவில் சரிவடைந்துள்ளது. மேலும், நகைகளுக்கான தேவையும், 30 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 125 டன் என்றளவில் குறைந்துள்ளது.
தனிஷ்க்:மதிப்பீட்டு காலாண்டில், தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. குறிப்பாக, டாட்டா குழுமத்தைச் சேர்ந்த, தனிஷ்க் நிறுவனத்தின் வருவாய் 7.8 சதவீத அளவிற்கே அதிகரித்துள்ளது. இது தவிர, தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல், 25 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், பண்டிகை காலம் நெருங்கி வருவதையடுத்து, தங்க ஆபரணங்கள் விற்பனை சூடுபிடிக்க துவங்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி:இந்நிலையில், நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் தங்க இறக்குமதி 40 சதவீதம் சரிவடைந்து, 350 டன்னாக குறைந்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு, சாதனை அளவாக,நாட்டின் தங்க இறக்குமதி 969 டன்னாக இருந்தது.இந்நிலையில், நடப்பாண்டில், வரும் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தங்க இறக்குமதி 450 டன்னை தாண்டுவது கடினம் என, பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|