பதிவு செய்த நாள்
27 ஆக2012
01:03
வரும் 2013ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் சந்தைப் பருவத்தில், கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்துவது குறித்து, வேளாண் செலவினம் மற்றும் விலைகள் ஆணையம்(சி.ஏ.சி.பி), மத்திய அரசுக்கு பரிந்துரை எதுவும் செய்யவில்லை.இதனால், நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்திற்கு, கோதுமைக்கு நிர்ணயிக்கப்பட்ட, குறைந்த பட்ச ஆதரவு விலையே, வரும் ஆண்டிற்கும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், மத்திய அமைச்சரவைக் குழுவிற்கே உள்ளது.உரிய விலை:விவசாயிகள் பாடுபட்டு விளைவிக்கும் வேளாண்பொருட்களுக்கு, உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக, விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையுடன், மாநில அரசுகளும் கூடுதலாக ஊக்கத் தொகை வழங்குகின்றன.இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறை மூலம், விவசாயிகள், இடைத்தரகர்களின் இடையூறின்றி, தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற முடிகிறது.
பொதுவாக, ஜூன் மாதம் தொடங்கும் பயிர் பருவத்தில் விளையும் கோதுமை, அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் சந்தைப்படுத்தும் பருவம் வரை விற்பனைக்கு வரும்.
சந்தை பருவம்:மத்திய அரசு, ஆண்டுதோறும் கோதுமை சந்தைப்படுத்தும் பருவத்திற்கான (ஏப்ரல்-மார்ச்) குறைந்தபட்ச ஆதரவு விலையை, உற்பத்தி, தேவை அடிப்படையில் முன்னதாகவே அறிவிக்கும்.
இந்நிலையில், கடந்த ஐந்து பயிர் பருவங்களாக, கோதுமை உற்பத்தி அதிகரித்து வந்ததை அடுத்து, அதன் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வந்தது.
சென்ற 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், ஒரு குவிண்டால் கோதுமை கொள்முதல் விலை, 1,120 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதனுடன் ஊக்கத்தொகை 50 ரூபாய் சேர்த்து, மொத்தமாக 1,170 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைத்தது.கொள்முதல் விலை உயர்வால் ஊக்கமடைந்த விவசாயிகள், அதிக பரப்பில் கோதுமையை பயிரிட்டனர். சென்ற பயிர்பருவத்தில் கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக 9.20 கோடி டன்னை தாண்டியது.
இதையடுத்து, நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்திற்கான கோதுமை கொள்முதல் விலை, 1,285 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில், சர்வதேச சந்தையில் கோதுமை விலை குறைந்துள்ளதாலும், உள்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், வரும் 2013-14ம் சந்தைப்பருவத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த, சி.ஏ.சி.பி., மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்றுமதிக்கு தடை:எனினும், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பட்சத்தில், அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையை, 10 சதவீதம் உயர்த்தலாம் என்றும் சி.ஏ.சி.பி., தெரிவித்துள்ளது.
அவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில், வரும் நிதியாண்டில், மத்திய அரசின் மானியச் சுமை மேலும் அதிகரிக்கும் என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் மானியச் சுமை, 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில், ஒரு டன் கோதுமை விலை 230-240 டாலராக உள்ளது. இது, ஒரு டாலர் 55 ரூபாய் என்ற மதிப்பில் கணக்கிடும்போது, 12,742 - 13,290 ரூபாய் என்ற அளவில் உள்ளது. ஆனால், உள்நாட்டு சந்தையில், இதை விட அதிகமாக, அதாவது, ஒரு டன் கோதுமை, 13 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது.இதனால், கோதுமை ஏற்றுமதியில், லாபம் மிகவும் சொற்பமாக உள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|