பதிவு செய்த நாள்
27 ஆக2012
01:30
சென்னை:நடப்பாண்டு, சிமென்ட், மணல் மற்றும் கம்பி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலை சார்ந்த லட்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மூலப்பொருட்கள்:இந்தியாவில் விவசாயத்துக்கு இணையாக, கட்டுமானத் துறை விளங்கி வருகிறது. கட்டுமானத் துறைக்கு மூலப்பொருட்களான, சிமென்ட், கம்பி மற்றும் மணல் விலை கிடுகிடுவென உயர்ந்து, சொந்த வீடு கனவு என்பது, நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.இதனால், அரசு மற்றும் தனியார் கட்டடப் பணிகள், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கட்டும் வீடுகள் அனைத்தும், பாதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அரசு கட்டடப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பலமுறை அழைத்தும், ஒப்பந்ததாரர்கள் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது. உச்சத்தில் இருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையால், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த, 2001- 2006ம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சியில், சிமென்ட்டுக்கு, இரட்டை வரி விதித்ததன் மூலம், விலையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆட்சி மாற்றத்துக்கு பின், தி.மு.க., ஆட்சியில், சென்ற, 2009ல், அதிகபட்சம் ஒரு மூட்டை சிமென்ட், 300 ரூபாயை தாண்டியது.
பின்னர், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் போராட்டங்களுக்கு பின், சென்ற, 2010ல், 60 ரூபாய் குறைந்து, ஒரு மூட்டை சிமென்ட், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வேலை இழப்பு:தற்போது, தனியார் சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் எந்த காரணமுமின்றி, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. அதேபோல், மணல், கம்பி ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளதால், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால், இத்தொழிலை சார்ந்த லட்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அனைத்து கட்டிடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மோகன்ராஜ் கூறியதாவது:சென்ற, இரண்டு ஆண்டுகளாக கட்டுமானத் துறையின் மூலப்பொருட்களான, சிமென்ட், மணல், கம்பி ஆகியவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள், மறைமுகமாக விலையை உயர்த்தி, மூட்டை, 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன.கடந்த, 2010ல் ஒரு மூட்டை சிமென்ட், 240 ரூபாயாக இருந்தது, 2011ல் 30 ரூபாய் அதிகரித்து, 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நடப்பாண்டு, மூட்டைக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 340 ரூபாயாக உயர்ந்துள்ளது. தவிர, ஒரு கிலோ கம்பி, 45 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட் மணல், 4,000லிருந்து, 8,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
புறக்கணிப்பு:இதன் காரணமாக, அரசு மற்றும் தனியார் கட்டிடப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தொழிலை சார்ந்த, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தால் மட்டுமே, இந்த விலை உயர்வை தடுக்க முடியும். அதேபோல், 11 தனியார் சிமென்ட் நிறுவனங்களை புறக்கணிக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|