பதிவு செய்த நாள்
27 ஆக2012
12:09
ஈரோடு : ஈரோட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில், மஞ்சள் விலை குவிண்டால், 9,000 ரூபாயாக நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், மஞ்சள் விலை நிர்ணய மாநாடு, ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் சரண் தாஸ் மகந்த் பேசியதாவது: வலி நிவாரணியாக இருக்கும் மஞ்சளை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வலியை போக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். மஞ்சளுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். இந்திய அரசின் புதிய திட்டத்தின் படி, விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்கப்படும். மத்திய அரசு, 50 சதவீதமும், மாநில அரசு, 50 சதவீதமும் பங்கேற்கும். இங்கு பேசியவர்கள், "மஞ்சள் சாகுபடி செய்ய குவிண்டாலுக்கு குறைந்தது, 9,000 ரூபாய் செலவாகிறது' என்றனர்.
இதை டில்லியில் எடுத்து சொல்வேன். ஈரோட்டில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் உணவுப்பூங்கா குறித்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம், 50 ஏக்கர் நிலம் வேண்டும். மத்திய அரசு, 50 கோடி ரூபாய் வழங்கும். விளை நிலத்தில் இருந்து நுகர்வோரை சென்றடையும் வரை உள்ள உணவுச்சங்கிலிக்கு, 10 கோடி ரூபாய் தர மத்திய அரசு உள்ளது. இந்தியாவில், 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் வீணாகின்றன. இதைப் பாதுகாக்க மத்திய அரசின் மானியத் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் பேச்சை முடித்த பிறகு இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது:
அமைச்சர் பேசுகையில், மஞ்சள் சாகுபடிக்கு குவிண்டாலுக்கு குறைந்தது, 9,000 ரூபாய் செலவாகிறது என்று கூறியதையே, குறைந்தபட்ச விலையாக ஏற்று அறிவித்து விட்டார். வாரம் இரு முறை கூடி, விலை நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்ச விலையான, 9,000 ரூபாய்க்கு குறைவாக மஞ்சளை விற்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தென்காசி எம்.பி., லிங்கம், ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி, "கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உட்பட பலர் இக்கூட்டத்தில் பேசினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|