பதிவு செய்த நாள்
29 ஆக2012
11:40
இந்தியாவில், டீஸல் கார்களின் மீதான வரியை உயர்த்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், சமீபத்தில் லோக்சபாவில் அளித்த தகவலில், இதை உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.என்.சிங், கூறியிருப்பதாவது: நாடு முழுவதும், 2011-12ம் ஆண்டில், 64.74 மில்லியன் டன் டீஸல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், கார்கள் மற்றும் விலை அதிகமான எஸ்.யு.வி., கார்கள் பயன்படுத்திய டீஸலின் அளவு, 16 சதவீதம். ஜெனரேட்டர்கள், 4.60 சதவீதம் பயன்படுத்தியுள்ளன. மொபைல் ஃபோன் டவர்களை இயக்க, 1.03 சதவீத டீஸல் செலவாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீஸல் விலையில், லிட்டருக்கு, ரூ.27.14 வித்தியாசம் காணப்படுகிறது. எனவே விலை குறைவான, மானிய விலையில் விற்கப்படும் டீஸல் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக எகிறியுள்ளது. மேலும், டீஸல் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. எனவே, டீஸல் கார்களின் மீது கூடுதல் கலால் வரியை விதிக்க வேண்டும் என, பெட்ரோலியம் அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதன்படி, சிறிய டீஸல் கார்களுக்கு கூடுதலாக, ரூ.1.70 லட்சமும், நடுத்தர மற்றும் பெரிய கார்களுக்கு, ரூ.2.55 லட்சமும் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பெட்ரோல் மற்றும் டீஸல் கார்களுக்கு பொதுவான கலால் வரி தான் வசூலிக்கப்படுகிறது. நான்கு மீட்டருக்கு மேல் நீளம் உள்ள, 1500 சிசி திறனுக்கு மேல் இன்ஜின் கொண்ட கார்களுக்கு, 27 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. நான்கு மீட்டர் நீளம் கொண்ட, குறைந்த சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கு, 24 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. சிறிய கார்களுக்கு, 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இது தான், லோக்சபாவில் மத்திய அமைச்சர் அளித்த பதில். இதன் மூலம், டீஸல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|