பதிவு செய்த நாள்
30 ஆக2012
00:34
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், வெளியீடு முடிந்த தேதியிலிருந்து, ஏழு தினங்களுக்குள், பங்குகளை, பங்குச் சந்தைகளில், பட்டியலிடும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது.
தற்போது, புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும், நிறுவனங்கள்,பங்கு ஒதுக்கீட்டைமேற்கொண்டு, 12 தினங்களுக்குள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் வகையில், நடைமுறை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைக்கும்வகையில், "செபி' பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்களை விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தி உள்ளது.
மூலதனச் சந்தை ஆலோசனை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், "செபி' அமைப்பு, பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.தற்போதைய நிலையில், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அவற்றின் பங்கு வெளியீட்டை, குறைந்தபட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம், 10 அலுவலக நாட்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இதை 2-3 தினங்களாக குறைக்கவும், வெளியீட்டு விலையில், மாற்றம் இருந்தால், கூடுதலாக இரண்டு அலுவலக நாட்களுக்கு நீட்டிப்பது குறித்தும் "செபி' பரிசீலித்து வருகிறது.
மேலும், பங்கு வெளியீடு முடிவடைந்த நாளில் இருந்து, பங்குகள் பட்டியலிடப்படுவது வரையில் உள்ள 12 நாட்கள் இடைவெளியை, ஏழு நாட்களாக குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.சென்ற 16ம் தேதி,"செபி' அமைப்பின், இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
"புக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில், புதிதாக, பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம், பங்கு வெளியீடு தொடங்கும் தினத்திற்கு முந்தைய, ஐந்து நாட்களுக்கு முன்பாக, பங்கின் வெளியீட்டு விலையை (குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச விலை)அறிவிக்க வேண்டும்.மேலும், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, ஒதுக்கப்பட உள்ள பங்குகள் குறித்த விவரங்கள், தேசிய அளவில், பங்கு கோரிய விண்ணப்பங்களை பெறுவதற்கான, பங்கு தரகு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன என்பதுஉள்ளிட்ட தகவல்களையும், நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என,"செபி' தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|