பதிவு செய்த நாள்
30 ஆக2012
00:40
புதுடில்லி:இந்திய ஜவுளி ஆலைகள், நடப்பு பருத்தி பருவத்தில் (அக்.,- செப்.,) 12 லட்சம் பருத்தி பொதிகளை(ஒரு பொதி = 170 கிலோ) இறக்குமதி செய்யக்கூடும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது.சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில் பருத்தி விலை உயர்ந்துள்ளதால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது. அயல்நாட்டு பருத்தி வகைகள், அதிக அளவில் நூலிழை உற்பத்தி திறன் கொண்டதாகவும், தரத்தில் சிறந்தவையாகவும் உள்ளன. இது தவிர, குறைந்த வட்டியில், சுலபமாக கிடைக்கும் சர்வதேச கடன் உதவி காரணமாகவும், இந்திய ஜவுளி ஆலைகளின் பருத்தி இறக்குமதி உயர்ந்துள்ளது.
மதிப்பீடு:"உள்நாட்டில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. பருத்தி ஆலோசனை வாரியத்தின் மதிப்பீட்டின்படி, நடப்பு பருவத்தின் முடிவில், பருத்தி கையிருப்பு 28.46 லட்சம் பொதிகளாக இருக்கும். இவை, ஜவுளி ஆலைகளின் ஒரு மாத தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை' என, மத்திய ஜவுளி அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பருத்தி இறக்குமதிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும், மத்திய அரசுக்கு இல்லை. ஜவுளி ஆலைகள், அவற்றின் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப பருத்தி வகைகளை இறக்குமதி செய்து கொள்ளலாம் என, அமைச்சர் கூறினார்.நாட்டின் பருத்தி உற்பத்தி, நடப்பு பருவத்தில், 3.53 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிட்டுள்ளது. இவை, சென்ற பருவத்தில் 3.39 கோடி பொதிகள் என்ற அளவில் இருந்தன. அதாவது, நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி, 14 லட்சம் பொதிகள் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள குஜராத்தின் சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் பிராந்தியங்களில், வழக்கத்தை விட, நடப்பாண்டு மழை பொழிவு, 72 சதவீதம் குறைந்துள்ளது. பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவிலும், போதிய மழையின்மையால் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சாகுபடி பரப்பு:பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநில விவசாயிகள், பருத்தி பயிரிடுவதை தவிர்த்து, நெல், கொத்தவரை, பருப்பு வகைகள், கரும்பு உள்ளிட்ட இதர பயிர் சாகுபடியில், கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதனால், இம்மாநிலங்களில், கணிசமான அளவிற்கு, இதன் சாகுபடி பரப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம், வரும் பருத்தி பருவத்தில் எதிரொலிக்கும்.
சென்ற ஜூலை 20ம் தேதி நிலவரப்படி, பருத்தி பயிரிடும் பரப்பளவு, சராசரியாக, 7 சதவீதம் குறைந்து, 83.7 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நடப்பு பருவத்தில், சந்தைக்கு, 3.40 கோடி பருத்தி பொதிகள் வந்துள்ளன. இது, பருத்தி ஆலோசனை வாரியத்தின் மதிப்பீட்டை (3.53 கோடி பருத்தி பொதிகள்) விட குறைவாகும். பருத்தி பருவம் முடிய, இன்னும் ஒரு மாதமே உள்ளதால், பருத்தி உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என்று இத்துறையினர் தெரிவித்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை:பருத்தி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. முன்பேரச் சந்தையில், ஒரு பவுண்டு பருத்தி விலை 88 சென்ட்டாக அதிகரித்துள்ளது. இது, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க பருத்தியின் விலையை விட, முறையே 14 சதவீதம் மற்றும் 10 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டு சந்தையில், ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தியின் விலை, தரத்திற்கேற்ப 34,700 - 45 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.மத்திய வேளாண் அமைச்சகம், வரும் பருவத்திற்கு, ஒரு குவிண்டால் பருத்திக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 3,600-3,900 வழங்க பரிந்துரை செய்துள்ளது. நடப்பு பருவத்தில், இதன் விலை, 2,200-3,300 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|