பதிவு செய்த நாள்
31 ஆக2012
00:11
வெளிநாடுகளிலிருந்து பட்டு வகைகளை உற்பத்தி செய்து பெறும் மத்திய அரசின் திட்டத்திற்கு, பட்டு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என, உடுமலை பகுதி விவசாயிகள், மத்திய ஜவுளி துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
போர்க்கொடி:கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளில் இருந்து கச்சா பட்டு வகைகளையும், கென்யா, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பருத்தி வகைகளையும் உற்பத்தி செய்து பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பற்றிய செய்தியை முதன் முதலாக "தினமலர்' வெளியிட்டது.
இதையடுத்து, பல விவசாய அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என, பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கச்சாப்பட்டு:இந்தியாவில், ஆண்டுதோறும் 18 ஆயிரம் டன் கச்சாப்பட்டு உற்பத்தியாகிறது. பட்டுத் துணிகள் உற்பத்திக்கு பற்றாக்குறையாக இருக்கும் 12 ஆயிரம் டன் கச்சா பட்டு, சீனா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு கடந்த 1997ம் ஆண்டு மத்திய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களை பல்வேறு மாநிலங்களில் துவங்கி பட்டுக்கூடு உற்பத்திக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியது.
இதனால், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட மாநிலங்களில் தொழில் நுட்பங்கள் மிகுந்த இத்தொழிலில், விவசாயிகள் தயக்கத்துடன் ஈடுபடத் துவங்கினர். படிப்படியாக உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்தது.
உற்பத்தி உயர்வுக்கு தடை போட்ட மத்திய அரசு: இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு, சீனாவிலிருந்து கச்சா பட்டு இறக்குமதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. பதுக்கல் சந்தைக்கு ஊக்கம் அளிக்கும் இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக சரிந்தது. தவறான இறக்குமதி கொள்கையால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மத்திய அரசு தற்போது கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து பட்டு உற்பத்தி செய்து பெற திட்டமிட்டுள்ளது.
பட்டு வளர்ப்பு:இதனால், உள்நாட்டில் பட்டுக்கூடுகளின் விலை சரிந்து, இத்தொழில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயம் சார்ந்த பட்டு வளர்ப்பு, ரீலிங் ஆகிய தொழில்களில், அதிக எண்ணிக்கையில், இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் பட்டு வளர்ப்பு தொழிலில் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு உதவினால், வெளிநாடுகளில் முதலீடு மற்றும் இறக்குமதி செய்வதற்கான தேவை இருக்காது என, இத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பீதியில் விவசாயிகள்:பட்டு வளர்ப்பு தொழிலில், ஈடுபட்டு வரும் பல விவசாயிகள் மல்பெரி செடி வளர்ப்பு போன்ற பணிகளுக்காக பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். வெளிநாடுகளில் உற்பத்தி செய்து பட்டு பெறப்பட்டால் உள்நாட்டு உற்பத்திக்கு, முற்றிலுமாக விலை கிடைக்காது.
உர விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், பட்டுக்கூடுகளின் விலை சரிவடைந்தால், அதிக இழப்பு ஏற்படும். வெளி நாடுகளில் முதலீடு செய்யும் தொகையை, உள்நாட்டு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பயன்படுத்தினால், தேவையான பட்டு உற்பத்தியை பெற முடியும் என, பட்டு விவசாயிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|