பதிவு செய்த நாள்
08 செப்2012
10:31
புதுடில்லி: விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.10,901 கோடி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் ரூ.3,267 கோடி நபார்டு வங்கிக்கும், மீதமுள்ள ரூ.7,634 கோடி பொதுத் துறை வங்கிகளுக்கும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு வங்கிகள் 7 சதவீத வட்டியில் வேளாண் கடன் வழங்கி வருகின்றன. கடந்த 2006-07ம் ஆண்டு கரீஃப் பருவத்திலிருந்து ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு இந்த வட்டி விகிதத்தில்தான் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2009-10ம் நிதி ஆண்டில், குறுகிய கால பயிர்க் கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு வட்டியில் ஒரு சதவீத தள்ளுபடி சலுகை வழங்கி, அந்த சுமையை அரசே ஏற்றுக் கொண்டது. 2010-11ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சரிவர கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் மேலும் ஒரு சதவீதம் தள்ளுபடி சலுகை அளித்தது. இதனையடுத்து இத்தகைய விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்க வகை செய்யப்பட்டது. 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இவர்களுக்கு மேலும் ஒரு சதவீத தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டது. இதனால் கடனை முறையாக செலுத்தும் விவசாயிகள் 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதும் என்ற நிலை உருவானது. எனினும் இந்த சலுகைகளால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு மானியம் வழங்கி ஈடு செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|