பதிவு செய்த நாள்
10 செப்2012
12:29

"டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும், மதுபானங்களின் விலை, ஐந்து ரூபாய் முதல், 95 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. நேற்று மாலையில், மாவட்ட மேலாளர்கள் தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தி, விலை உயர்வு உத்தரவு மற்றும் புதிய விலைப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளன. கடந்த, 2003ம் ஆண்டிலிருந்து, "டாஸ்மாக்' மூலம், மது விற்பனையை அரசு துவக்கியது. முதல் ஆண்டில், 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், தமிழகம் முழுவதும் செயல்படும், 6,900க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூலம், 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை பூர்த்தி செய்ய, கடந்த ஜூன், 14ம் தேதி முதல், பீர் விலை, 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. தற்போது, ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களான, பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் உள்ளிட்ட அனைத்து மது பானங்களின் விலையும், உயர்த்தப்பட உள்ளது. விலை உயர்வு பட்டியலும் தயார் செய்யப்பட்டு, முதல்வரிடம் அனுமதியும் வாங்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று முதல் சரக்குகளின் விலை உயர்வு அமல் படுத்தப்படுகிறது. இதற்காக, நேற்று மாலையில், மாவட்ட மேலாளர்கள் தலைமையில், கடைகளின் மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், புதிய விலைப்பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியல்படி, அனைத்து, "குவார்ட்டர்' (180 மில்லி லிட்டர்) பாட்டில்களும், இனி, 70, 80, 90, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல், "ஆப்' (375 எம்.எல்.,)பாட்டில்களின் விலையில், ஐந்து ரூபாயில் முடியும் அனைத்து சரக்குகளின் விலையில், 15 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 10 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. "புல்' (750 எம்.எல்.,)பாட்டில்களின் விலையை பொறுத்தவரை, ஐந்து ரூபாயில் முடியும் சரக்குகளின் விலையில், 25 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 20 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. உயர்ரக மது பானங்களான, "ஸ்காட்ச்' விலை, 45 ரூபாய் முதல், 125 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. "டாஸ்மாக்' கடைகளில், சில்லரை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, விற்பனையாளர்கள், ஐந்து ரூபாய் விலையை உயர்த்தி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், இனி அனைத்து சரக்குகளின் விலையும் இரட்டை இலக்கம், அதாவது, 70, 80, 90 ரூபாயில் முடியும் வகையில் விலைப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டில் பீர் விலை ஜூன், 14ம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. அதையடுத்து, பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் சரக்குகளின் விலையை உயர்த்த, ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு விட்டது. இன்று முதல், புதிய விலை உயர்வுப்படி, சரக்குகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|