பதிவு செய்த நாள்
13 செப்2012
12:49
சென்னை : ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, மானிய விலையில் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, வெளியான அரசு அறிக்கையில் உள்ள தகவல்: அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை சார்ந்துள்ளது. விலையேற்றம் தமிழக மக்களை பாதிக்காத வகையில், விலைவாசியை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக, 50 கோடி ரூபாய் நிதி இருப்புடன் கூடிய, விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம், சமீபத்தில் நடந்த போது, விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், விலைக் கட்டுப்பாட்டு நிதியத்தை பயன்படுத்தி, நெல் விளைச்சல் அதிகமாக உள்ள மேற்கு வங்கத்தில் இருந்து, தமிழகத்தின் பொன்னி அரிசிக்கு இணையான அரிசி வகைகளை கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்த அரிசி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமுதம் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் வினியோகிக்கப்படும். ஒரு கிலோ அரிசி, 25 ரூபாய்க்கும், மற்ற ரக அரிசி, 31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சராசரியாக, மாதம் ஒன்றிற்கு, 14 ஆயிரம் டன் துவரம் பருப்பில், 2,000 டன் பருப்பை, கிலோ ஒன்றிற்கு, 55 ரூபாய் என, சிறிதளவு மானிய விலையில், மத்திய அரசு வழங்கி வந்தது. இது, இங்கு கிலோ ஒன்றிற்கு, 30 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது. ஆனாலும், இம் மானியத்தை கடந்த ஜூன் மாதத்துடன் மத்திய அரசு நிறுத்தி விட்டது.
இது தவிர, மத்திய மானியம் இல்லாத உளுத்தம் பருப்பும், கிலோ, 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர், சந்தை விலை, 66.30 ரூபாய். அதை, 52.65 ரூபாய் என்ற விலையில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. இது தற்போது, லிட்டர் ஒன்றிற்கு, 25 ரூபாய் என்ற விலையில், ரேஷன் கடையில் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை, அக்., 1ம் தேதி முதல், அடுத்தாண்டு, மார்ச் 31ம் தேதி வரை, மேலும் ஆறு மாதங்களுக்கு வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 907 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அதே சமயம், வெளிச்சந்தையில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை, கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|