பதிவு செய்த நாள்
14 செப்2012
10:19
புதுடில்லி: டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்த்தப்படவில்லை. இனிமேல், ஒரு வீட்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர் மட்டுமே, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் கிடைக்கும். அரசியல் விவகாரத்துக்கான கேபினட் கமிட்டி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கூடியது. அப்போது, டீசல் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்த்தப்படவில்லை. மேலும், மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானியவிலையில் சப்ளை செய்யப் படும். கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படுவோர், சிலிண்டர் ஒன்றுக்கு, தலா 300 ரூபாய் வரை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். பெட்ரோல் விலை மீதான கலால் வரியை, லிட்டருக்கு ரூ.5.50 குறைக்க, கேபினட் கமிட்டி ஒப்புக் கொண்டது. இதனால், பெட்ரோல் விலை இப்போதைக்கு உயர்த்தப்படவில்லை இதையடுத்து, டீசல் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல், அமலுக்கு வந்தது. சென்னையில் டீசல் விலை, லிட்டர் ரூ.48.91 ஆக விற்கப்பட்டது. டீசல் விலை உயர்வுக்கு ஐ.மு., கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்., உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வால், லாரிகளின் வாடகைக் கட்டணம் உயரும் என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|