பதிவு செய்த நாள்
17 செப்2012
01:02
புதுடில்லி:சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, சிமென்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், கட்டுமானச் செலவு எகிறும் என, வீடு கட்டுவோர் கவலை அடைந்துள்ளனர்.டீசல் விலை:மத்திய அரசு, நேற்று முன்தினம், டீசல் விலையை லிட்டருக்கு, 5.62 ரூபாய் உயர்த்தியது. இதையடுத்து, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு, நாடு தழுவிய அளவில் சரக்கு கட்டணத்தில், 15 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்த அமைப்பின் கீழ், இந்தியாவில், 80 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால், பலதரப்பட்ட நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இது குறித்து, ஜே.கே.லஷ்மி சிமென்ட் நிறுவனத்தின் இயக்குனர் சைலேந்திர சோக்சி கூறும்போது, மூலப்பொருட்களை கொண்டு வரவும், சிமென்டை சந்தைப்படுத்துவதற்கும் அத்தியாவசியமான, போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது. பொதுவாக, ஒரு டன் சிமென்ட் தயாரிக்க, இரண்டு டன் மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
இதன்படி, மூன்று டன் அளவிற்கான சரக்கு போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளது. இதனால், சிமென்ட் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் நிறுவனங்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாகவே ஒட்டுமொத்த கட்டுமானத் துறை மந்த நிலையில் இருந்து வருகிறது. இதன் தாக்கத்தால், வட இந்தியாவில், 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை, 250 -260 ரூபாயாக உள்ளது. சிமென்ட்டிற்கான தேவை குறைந்துள்ளதால், பல நிறுவனங்கள், அவற்றின் சிமென்ட் உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. சிமென்ட் நிறுவனங்களின், ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி ஆண்டுக்கு, 33 கோடி டன்னாக உள்ளது.
உற்பத்தி திறன்:கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனில், 76 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், சிமென்ட் விற்பனை, 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22.5 கோடி டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இந்த வளர்ச்சி, 5.1 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|