பதிவு செய்த நாள்
19 செப்2012
05:41
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வங்கிகள் வழங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்றும், இதனால் தொழில் துறை வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற திங்களன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,), 0.25 சதவீதம் குறைத்து, 4.50 சதவீதமாக நிர்ணயித்தது.இதனால், வங்கிகளுக்கு கூடுதலாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு கிடைக்கும். இதையடுத்து, பல வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளன.
இதனால், கடன் பெறுவது அதிகரிக்கும். குறிப்பாக, வங்கிகள், தொழில் துறை நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க முடியும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, முதலாவதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பல வகை கடன்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என, தெரிகிறது. ஏற்கனவே இவ்வங்கி, வீட்டு வசதி மற்றும் கார் கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது.
தற்போது, சி.ஆர்.ஆர். குறைப்பால், இவ்வங்கிக்கு கூடுதலாக, 2,500 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என்பதால், உற்பத்தி துறை சார்ந்த, சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என, இவ்வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடிப்படை வட்டி விகிதம்:இவ்வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 10 சதவீதமாக உள்ளது. அதே சமயம், கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் அடிப்படை வட்டி வகிதம் 10.5 சதவீதமாக உள்ளது.
தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், கோட்டக் மகிந்திரா பேங்க் ஆகியவற்றின் அடிப்படை வட்டி விகிதம் 9.75 சதவீதமாக உள்ளது. இது, எ.டீ.எப்.சி. பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றில் 10 சதவீதமாக உள்ளது.
நிதிச் செலவினம், நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, வட்டி குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.சி.ஆர்.ஆர்., குறைக்கப்பட்டதால், பேங்க் ஆப் பரோடாவிற்கு, கூடுதலாக 720 கோடி ரூபாய் கிடைக்கும். அதிக அளவில் நிதிப் புழக்கத்தை கொண்டுள்ள இவ்வங்கியும், செலவினங்களின் அடிப்படையில், வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.கனரா பேங்க், தற்போது குறிப்பிட்ட கடன் பிரிவுகளுக்கு மட்டும் வட்டியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இவ்வங்கி, அக்டோபரில் நடைபெற உள்ள, அதன் ஆய்வுக் கூட்டத்தில், அடிப்படை வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் என, தெரிகிறது. இவ்வங்கி, அண்மையில் வீட்டு வசதி மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது.வங்கிகள் திரட்டும் மொத்த டொபசிட்டில், குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியிடம் இருப்பாக வைக்க வேண்டும். இதற்கு ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) என்று பெயர்.இவ்வகையில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள சி.ஆர்.ஆர்., மூலம், வங்கிகளுக்கு வட்டி வருவாய் ஏதுமில்லை. இந்நிலையில், தற்போது சி.ஆர்.ஆர்., 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதன் வாயிலாகக் கிடைக்கும் நிதியை, வங்கிகள் தாராளமாக கடன் வழங்க பயன்படுத்திக் கொண்டு, வட்டி வருவாயை அதிகரித்துக் கொள்ள இயலும்.
சீர்திருத்த திட்டங்கள்:இதனிடையே, மத்திய அரசு, தொழில்துறையை ஊக்குவிக்கும் விதத்தில், மேலும் பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை அறிவிக்க இருப்பதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் :தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், வளர்ச்சி சார்ந்த கடன் தேவைகளை அதிகரிக்கும். அதே சமயம், வங்கி வட்டாரத்தில் தாராளமாக புழங்கும் நிதியால், மேற்கண்ட நிறுவனங்கள் சுலபமாக கடன் பெற முடியும். இது, மந்தகதியில் உள்ள தொழில் துறைக்கு உத்வேகமும், ஊக்கமும் அளித்து, வளர்ச்சிக்கு வித்திடும் எனலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|